Published : 07 Mar 2018 09:18 AM
Last Updated : 07 Mar 2018 09:18 AM
நாகாலாந்து மாநிலத்தின் புதிய அரசை அமைக்குமாறு தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைவர் நெபியு ரியோவுக்கு அம்மாநில ஆளுநர் பி.பி. ஆச்சார்யா அழைப்பு விடுத்துள்ளார்.
நாகாலாந்து சட்டப்பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) 27 தொகுதிகளைக் கைப்பற்றியது. என்டிபிபி - பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி கண்டன. இதில், என்டிபிடி 16 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எனினும், எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கு தேவை யான பெரும்பான்மை கிடைக்க வில்லை.
இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் (ஜேடியு) ஒரு உறுப்பினரின் ஆதரவைப் பெற்று, என்டிபிபி ஆட்சியமைக்க உரிமைக் கோரியது.
அதேசமயத்தில், பாஜகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஏற்பட வாய்ப்பிருப்பதால் என்டிபிபி கட்சியை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது என்று முதல்வர் ஜேலியாங் போர்க்கொடி உயர்த்தினார்.
இதன் காரணமாக, ஆட்சியைப் பிடிப்பதற்காக, நாகாலாந்தில் என்பிஎப் கூட்டணிக்கு பாஜக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தேர்தலின்போது தாம் கூட்டணியில் இருந்த என்டிபிபி கட்சிக்கே ஆதரவளிப்பதாக ஆளுநரிடம் பாஜக நேற்று உறுதிக் கடிதம் அளித்தது. மேலும், என்டிபிபி தலைவர் நெபியு ரியோ தலைமையிலான அரசு அமைவதற்கு, தங்களிடம் உள்ள 12 எம்எம்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் பாஜக சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து, என்டிபிபி தலைவர் நெபியு ரியோவை ஆட்சியமைக்க வருமாறு மேகாலயா ஆளுநர் பி.பி. ஆச்சார்யா நேற்று மாலை அழைப்பு விடுத்தார். இதையடுத்து, அவர் வரும் 8-ம் தேதி பதவியேற்பார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின் றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT