Published : 20 May 2019 06:56 PM
Last Updated : 20 May 2019 06:56 PM
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவுகளுக்குப் பிறகான கருத்துக் கணிப்புகள் முடிவுடன் பெரும்பாலும் ஒத்துப் போகும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஞாயிறன்று வெளியாகின, இதில் நரேந்திர மோடி தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னொரு 5 ஆண்டுகாலத்திற்கு நீடிக்கும் என்ற விதமாக அமைந்தன.
பெரும்பாலான நிறுவனங்கள் கருத்துக் கணிப்பில் பாஜக தலைமை தேஜகூ 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கணித்திருந்தன. 272 என்ற பெரும்பான்மைத் தேவை இடங்களை வெகு எளிதாக பாஜக கூட்டணி கடந்து விடும் என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தனது வலைப்பக்கத்தில் “தி மெசேஜ் ஆஃப் எக்ஸிட் போல்ஸ்” (கருத்துக்கணிப்புகளின் செய்தி) என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள அருண் ஜேட்லி அதில் கூறியிருப்பதாவது:
நம்மில் பலரும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் துல்லியத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவோம், ஆனால் வன்மையான எதார்த்தம் என்னவெனில் பல்வேறு கணிப்புகளும் ஒரே செய்தியைக் கூறுகின்றன எனும்போது தேர்தல் முடிவுகளின் திசை அந்தச் செய்தியுடன் ஒத்துப் போவதாகவே இருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்திற்கெல்லாம் இங்கு வேலையில்லை. கருத்துக் கணிப்பு முடிவுகள்தான் தேர்தல் முடிவாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரப் பிரச்சினையெல்லாம் இருப்பதற்கான நியாயத்தை இழந்து விடும்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை 2014 தேர்தல் முடிவுகளுடன் இணைத்து வாசித்தால் இந்திய ஜனநாயகம் பெரிய அளவில் முதிர்ச்சியடைவது தெளிவாகத் தெரியும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கும் முன்பாக வாக்காளர்கள் தேச நலனை கருத்தில் கொண்டிருக்கின்றனர். ஒத்த கருத்துள்ள வாக்காளர்கள் ஒரே திசை நோக்கி வாக்களிக்கின்றனர் என்றால் அதுதான் அலையாக மாறுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு அதன் ‘பெரிய குடும்பம்’ சொத்தாக இல்லாமல் பெரிய சுமையாக மாறியுள்ளது, ஆனால் குடும்பம் இல்லாமல் அவர்களுக்கு கூட்டம் சேராது. வாக்குகளும் சேராது.
தலைவர்களை அவர்கள் சார்ந்த குடும்பத்தை வைத்தோ சாதியை வைத்தோ ஒருவரும் எடைபோடுவதில்லை. எனவேதான் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்திறன் அடிப்படையிலான விவகாரங்கள் தான் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது.
பகைமையின் கூட்டணியை மக்கள் நம்புவதில்லை. சாதிக் கூட்டணி கணக்குகள் செல்லுபடியாகாது, இதன் இடத்தை தேச நலன் பிடித்து விட்டது. பொய்மைகளை உற்பத்தி செய்பவர்களுக்குத்தான் போலி பிரச்சினைகள் திருப்தி அளிக்கும் வாக்காளர்கள் அதனைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் அருண் ஜேட்லி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT