

இந்திய ராணுவத்துக்காக தாத்ரா வாகனங்களை வாங்க, முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங்குக்கு ரூ.14 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்தார் என்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங்குக்கு வெள்ளிக்கிழமை ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த வழக்கைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த திங்கள்கிழமை தேஜிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். ராணுவத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இவர் பணியாற்றியதால் இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களுக்கு அழுத்தம் தரலாம் என்ற காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்தது.
எனவே, இவரை செப்டம்பர் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 1ம் தேதி) உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து அன்றே டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் வழங்க தேஜிந்தர் சிங் மனு செய்தார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தேஜிந்தர் சிங்குக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டது நீதிமன்றம்.