Published : 10 May 2019 07:03 PM
Last Updated : 10 May 2019 07:03 PM

நாளை மறுதினம் 6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 59 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் 59 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. 6-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில், பிஹார் (8 தொகுதிகள்), ஹிரியாணா (10), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), உத்தரபிரதேசம் (14), மேற்குவங்காளம் (8), டெல்லி (7) ஆகிய 7 மாநிலங்கள் 6-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்தது. தேர்தைலையொட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். 6-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர்  மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய  வேட்பாளர்கள் ஆவர். இவர்கள் இன்று இறுதி கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

59 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 8 தொகுதிகளிலும் அதிகபட்சமாக 70 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 7 தொகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் 60 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் 59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 311 வேட்பாளர்கள் கோடீஸ்வர வேட்பாளர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x