Last Updated : 30 May, 2019 12:49 PM

 

Published : 30 May 2019 12:49 PM
Last Updated : 30 May 2019 12:49 PM

பிரதமர் மோடியுடன் அமித் ஷா சந்திப்பு: அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை

2-வது முறையாக பிரதமர் மோடி இன்று மாலை பதவி ஏற்கும் நிலையில், அதற்கு முன்னதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் இறுதிக்கட்டமாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் கூட்டணிக் கட்சிகளில் எத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது, யாருக்கு எந்தத் துறைகள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அமைச்சர்கள் பட்டியல் இன்னும் சில மணிநேரத்தில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

பிரதமர் மோடி 2-வது முறையாக பிரதமராக இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவி ஏற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்பதால் டெல்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்களை அளிக்கலாம், யாருக்கு எந்தத் துறையை ஒதுக்கலாம் ஆகியவை குறித்து பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் இன்று பலகட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பிரதமர் மோடியின் 2-வது அரசில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை அமைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, லோக் ஜனதா தளம், அகாலி தளம், அப்னா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படும். அதிலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு இடம் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவசேனா கட்சியைப் பொறுத்தவரை அரவிந்த் சாவத் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் காங்கிரஸ் வேட்பாளர் மிலந்த் தியோராவைத் தோற்கடித்தவர் அரவிந்த் சாவந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக் ஜனசக்தி கட்சி சார்பில் மீண்டும் ராம்விலாஸ் பாஸ்வான் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி புதிதாக அமையும் அமைச்சரவையில் தனக்குப் பதவி வேண்டாம் என்று உடல்நிலையைக் காரணம் காட்டி விலகிக்கொண்டார். இதனால், நிதியமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலுக்கு வழங்கப்படலாம். ஏற்கெனவே அவர் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுகிறது. அமித் ஷாவுக்கு  நிதி, உள்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொறுப்பு வழங்கப்படலாம்.

ஆனால் அமைச்சரவையில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள், யார் யாருக்கு எந்தப் பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து பாஜக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர், ரவி சங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு நிச்சயம் அமைச்சரவையில் இடம் இருக்கிறது என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x