Published : 08 May 2019 12:00 AM
Last Updated : 08 May 2019 12:00 AM
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆளும் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதற்காக, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோரை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இருந்தபோதிலும், சில விவகாரங்களில் கருத்தொற்றுமை ஏற்படாததால் இந்த முயற்சி கைகூடவில்லை. ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, மூன்றாவது அணி அமைக்கப்படும் என ஊகங்கள் நிலவுகின்றன.
இதனிடையே, மேற்கு வங்க மக்களவைத் தேர்தலுக்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஜர்கிராம் மற்றும் ஹால்தியா பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், இந்தப் பிரச்சாரங்களில் அவருடன் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொள்ளவுள்ளார்.
பின்னர், காரக்பூரில் நாளை நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்திலும் மம்தாவுடன் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார். அதன் பின்னர், அன்றைய தினம் இரவு, மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்துவார் என ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT