Published : 15 May 2019 03:25 PM
Last Updated : 15 May 2019 03:25 PM
பந்தேஷ்வரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 நாட்களுக்குள் 36 வயது ஆண் 46 வயது பெண்மணியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல், கைது செய்யப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டுள்ளார். அவர்கள் ஜோனாஸ் ஜோலின் சாம்சன் (36), விக்டோடியா மத்தியாஸ் (46) ஆகியோர்களாவார்கள்.
இந்த கொலை தொடர்பாக போலீஸார் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து கொலையுண்டவருக்கும் கொலை செய்தவருக்கும் இடையே நிதிப்போக்குவரத்து தொடர்பு இருந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட ஸ்ரீமதி ஷெட்டி (40) அத்தாவரில் மின்சாரச் சாதன விற்பனை அங்காடி நடத்தி வந்தார். இவர் சாம்சனுக்கு ரூ.1 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். சாம்சன் நந்திகுட்டேவின் ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். வாங்கிய கடனில் ரூ.40,000 திருப்பி கொடுத்துள்ளார் சாம்சன், மீதி ரூ.60,000 தொகையை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. ஏனெனில் பாஸ்ட் புட் கடை சரியாக ஓடாததால் கடை மூடப்பட்டு விட்டது, சாம்சனிடம் பணம் இல்லை.
இந்நிலையில் கடந்த மே மாதம் 11ம் தேதி ஸ்ரீமதி பணத்தை கேட்க சாம்சன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்ற மத்தியாஸ் முன்னிலையில் சாம்சன் ஸ்ரீமதியை படுகொலை செய்துள்ளார். பிறகு நள்ளிரவு ஸ்ரீமதியின் உடலை 3பகுதிகளாகத் துண்டித்து கோணிப்பையில் திணித்து நகரின் வெவ்வேறு பகுதிகளில் விட்டெறிந்துள்ளார் சாம்சன், என்று போலீஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பண்டுவா கல்லூரி சந்திப்பு மற்றும் கேபிடி ஜங்ஷன் இடையே பழக்கடை அருகே ஸ்ரீமதியின் உடல் பகுதி ஒன்று கிடந்துள்ளது. பதுவா ஜங்ஷனில் போலீஸார் ஸ்ரீமதியின் கால்களைக் கைப்பற்றினர். சில பகுதிகள் நந்திகுட்டேவில் கிடைத்தன. நாகுரியில் ஸ்ரீமதியின் இருசக்கரவாகனம் அனாதையாகக் கிடந்துள்ளது.
இந்த படுபாதகக் கொலையை கண்டுபிடிக்க 30 போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் துணை ஆணையர், உதவி ஆணையர் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அடங்குவர்.
தீவிர ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகு பணத்தகராறு காரணம் கண்டறியப்பட்டது. மொபைல் போன் தரவுகளும் மே 11ம் தேதி ஸ்ரீமதி ஷெட்டி கடைசியாக சாம்சன் வீட்டுக்கு சென்றுள்ளதை உறுதி செய்தது.
போலீஸார் சாம்சனை கைது செய்ய சென்ற போது அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் போலீசார் தடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மத்தியாஸை போலீஸார் விசாரித்த போது கடன் பிரச்சினையையும் கொலையையும் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவர்களிடமிருந்து ஸ்ரீமதிக்குச் சொந்தமான 8 தங்க மோதிரங்கள், தங்க நெக்லஸ் கைப்பற்றப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சாம்சன் மீண்டும் போலீசார் விசாரணிக்கு வரும்போது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 2010-ல் சாம்சன் மீது கொலை வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT