Published : 22 May 2019 03:26 PM
Last Updated : 22 May 2019 03:26 PM
சமூக வலைதளச் செயலியான டிக் டாக்கில் பிரபலமாக இருந்தவரும் ஜிம் பயிற்சியாளருமான மோஹித் என்பவர் டெல்லியில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தென் மெற்கு டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் இந்தக் கொலை நடந்துள்ளது.
ஹரியாணாவின் பஹாதுர்கர் பகுதியைச் சேர்ந்த மோஹித், நஜாஃப்கரில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த மோஹித்துக்கு, டிக் டாக் செயலி வரப்பிரசாதமாக அமைந்தது.
தொடர்ந்து ஏராளமான வீடியோக்களைப் பதிவிட்டார். சமூக நல்லிணக்கம், நன்றியை எதிர்பார்க்காமல் உதவி செய்வது, பாலிவுட் படங்களின் சீன்கள் உள்ளிட்ட அவரின் வீடியோக்கள் வைரலாகின. விரைவில் டிக் டாக்கில் அவரைப் பின் தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது.
இது அங்கிருந்த உள்ளூர் இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மோஹித்துக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோஹித் அவர்களைக் கிண்டல் செய்யும் விதமாக வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இது இளைஞர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நஜாஃப்கரில் உள்ள நண்பரின் கடைக்கு வந்த மோஹித்தை, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் சரமாரியாகச் சுட்டதில் அவரின் மார்பு, வயிற்றுப் பகுதிகளில் 8 முறை குண்டுகள் பாய்ந்தன. உடனே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் மோஹித். சில நொடிகளிலேயே உயிர் பிரிந்தது.
இதுகுறித்து துவாரகா டிசிபி அல்போன்ஸ் கூறும்போது, ''மோஹித்தின் மரணத்துக்குக் கும்பல் வன்முறை காரணம் அல்ல என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகவே கொலை நடந்துள்ளது.
கொலையாளிகளில் ஒருவர் ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு மீண்டும் அணிந்துள்ளார். சிசிடிவி கேமராவில் அவரின் முகம் சிக்கியுள்ள நிலையில், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT