Published : 14 Sep 2014 09:49 AM
Last Updated : 14 Sep 2014 09:49 AM

கோயில் திருவிழாவில் ரோஜா மீது தாக்குதல் கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி

அம்மன் கோயில் திருவிழாவில் நடிகை ரோஜா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரியில் கடந்த 5 ஆண்டுகளாக கங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு அம்மன் ஊர்வலம் நடைபெற இருந்தது. அப்போது நகரி சட்டமன்ற உறுப்பினரான ரோஜா, அம்மனுக்கு முதல் ஆரத்தி வழங்க சீர்வரிசை தட்டுடன் வந்தார். அங்கிருந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் ரோஜாவின் கையில் இருந்த ஆரத்தி தட்டை கீழே தட்டிவிட்டனர். இதில் ரோஜாவின் கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பதற்றம் உருவானது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதனை தொடர்ந்து இரவு 12 மணி வரை ரோஜா மற்றும் அவரது ஆதரவாளர் கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நகரி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருப்பதி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரிடையே சமாதானம் செய்து இரவு 12.30 மணி அளவில் அம்மன் ஊர்வலத்தை நடத்தினர்.

சனிக்கிழமை காலை ரோஜா தலைமையில் மீண்டும் நகரியில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு பெண் எம்.எல்.ஏ. என்றும் பாராமல் காட்டுமிராண்டித்தனமாக ஆளும் கட்சியினர் நடந்து கொண்டுள்ளனர். இந்த தொகுதியில் என்னுடன் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. முத்து கிருஷ்ணம்ம நாயுடுவின் ஆதரவாளர்கள்தான் என்மீது தாக்குதல் நடத்தினர். எம்.எல்.ஏ.வுக்கே இந்த கதி என்றால் சாதாரண பொது மக்களின் கதி என்னாவது? என் மீது தாக்குதல் நடத்திய வர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு ரோஜா கூறினார்.

சித்தூர் எஸ்.பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் ரோஜா புகார் மனு அளித்தார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக போலீஸார் உறுதி அளித்ததால் போராட்டத்தை அவர் வாபஸ் பெற்றார். மறியல் போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ரோஜா மீது தெலுங்கு தேசம் புகார்

இதனிடையே தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த நகரி முதலாவது வார்டு கவுன்சிலர் லதா உள்ளிட்டோர் சித்தூர் எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் அளித்தனர். அந்த புகாரில், கோயில் திருவிழாவில் ரோஜா அரசியல் செய்கிறார். அவரால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x