Published : 28 May 2019 12:00 AM
Last Updated : 28 May 2019 12:00 AM
கர்நாடாகவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்காத ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரிடம் பாஜக தரப்பில் தங்கள் கட்சியை ஆதரிக்குமாறு குதிரை பேரம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் பணியில் முதல்வர் குமாரசாமி இறங்கியுள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குமாரசாமி தரப்பில், “காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்கலாம். முதல் கட்டமாக அமைச்சரவையில் உள்ள பிரியங்க் கார்கே, சீனிவாஸ், புட்டராஜூ, யு.டி.காதர், ஜெயமாலா, புட்டரங்க ஷெட்டி உள்ளிட்ட 10 பேரில் 5 பேரை அமைச்சரவையில் இருந்து நீக்கலாம். அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர், சுயேச்சை எம்எல்ஏ சங்கர் உள்ளிட்டோரை அமைச்சரவையில் சேர்க்கலாம். இதன் மூலம் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்எல்ஏ-க்களை சமாளிக்க முடியும். எனவே காங்கிரஸ் தரப்பில் யாரை அமைச்சராக்குவது என்பது குறித்த பட்டியலை வழங்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்க முதல்வர் குமாரசாமி நாளை அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டியுள்ளார். அதில் அமைச்சரவை மாற்றம் குறித்து விரிவாக பேசப்பட உள்ளதாக தெரிகிறது. இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கேட்டு மூத்த தலைவர்களை முற்றுகையிட்டுள்ளனர். காங்கிரஸ் தரப்பில் வழங்கப்படும் பட்டியலைக் கொண்டு ஜூன் 10-ம் தேதிக்கு மேல் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ள குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT