Published : 18 May 2019 12:00 AM
Last Updated : 18 May 2019 12:00 AM
நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 543 இடங்களுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, 6 கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக, பிஹார் (8), இமாச்சலபிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்குவங்கம் (9) மற்றும் சண்டிகர் (1) ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட 59 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தில் வன்முறை காரணமாக 9 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி நேற்று முன்தினமே பிரச்சாரம் முடிந்தது.
இந்நிலையில் 50 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இறுதிகட்ட தேர்தலில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி (வாரணாசி-உ.பி.), மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் (சசாராம்-பிஹார்), சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் (பெரோஸ்பூர்-பஞ்சாப்), இவரது மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் (பதிண்டா-பஞ்சாப்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மணீஷ் திவாரி (அனந்த்பூர் சாஹிப்), ஜோதிராதித்ய சிந்தியா (குணா-ம.பி.) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் கருவிகளுடன் நேற்று இரவு சென்று சேர்ந்துள்ளனர். பதற்றமான, அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT