Published : 13 May 2019 08:25 PM
Last Updated : 13 May 2019 08:25 PM
டெல்லி, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது.
நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் மட்டும் தலைமை நீதிபதிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நீதிபதிகள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி. ரமணா ஆகியோர் கொண்ட கொலிஜியம் அமைப்பு, குஜராத் நீதிமன்ற நீதிபதி டி.என்.படேலை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பரிந்துரைத்துள்ளது. தற்போது படேல் ஜார்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் ராஜேந்திர மேனன் வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, தற்போது தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் ஆர்எஸ்.சவுகானை, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி, தற்போது மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் ஏ.ஏ.குரேஷியை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இமாச்சலப் பிரதேச நீதிபதியாக இருந்த சூர்ய காந்த் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள வழக்கறிஞர்கள் விஷால் தாகத், விஷால் மிஸ்ரா ஆகியோரை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைத்துள்ளது கொலிஜியம் அமைப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT