Last Updated : 31 May, 2019 11:17 AM

 

Published : 31 May 2019 11:17 AM
Last Updated : 31 May 2019 11:17 AM

இன்று மாலை மத்திய அமைச்சரவை கூடுகிறது?- அரசு வட்டாரம் தகவல்

புதிதாக பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறவுள்ளதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது.

நாட்டின் 17-வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடந்தது. மே 23-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 303 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியும் 24 கேபினட் அமைச்சர்களும் 9 இணையமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம் விலாஸ் பஸ்வான், ரவிசங்கர் பிரசாத், எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிய அமைச்சரவையில் பழைய முகங்களான சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெறவில்லை. அருண் ஜேட்லி உடல் நிலை காரணமாக தான் அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை எனக் கூறிவிட்டார்.

அதேபோல், முதல்கட்ட மத்திய அமைச்சரவை பட்டி யலில் தமிழகத்தில் இருந்து யாரும் இடம்பெறவில்லை. தமிழகத்தில் நிலவும் மோடி எதிர்ப்பு அலை காரணமாகவே, அமைச்சரவை வாய்ப்பை அதிமுக தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x