Published : 18 Sep 2014 10:57 AM
Last Updated : 18 Sep 2014 10:57 AM

சீன அதிபரிடம் எல்லைப் பிரச்சினையை எழுப்பினார் மோடி

இந்தியா எல்லையில் அத்துமீறி சீனப் படைகள் ஊடுருவம் பிரச்சினை குறித்து அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்றைய சந்திப்பின்போது மேலும் விரிவாக ஆலோசிக்கப்படும் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அகமதாபாத்தில் சீன அதிபர் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்து நிகழ்ச்சியின்போது சீன அதிபரிடம், இந்திய எல்லையில் சீனப் படைகள் அத்துமீறுவது குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் சும்மார் பகுதியில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதேபோல், லடாக் பகுதியில் சீனர்கள் ஊடுருவியுள்ளனர். இந்திய எல்லைக்குள் 500 மீட்டர் வரை அவர்கள் ஊடுருவியுள்ளனர்.

இந்த இரு ஊடுருவல் குறித்தும் சீன அதிபரிடம் மோடி இன்றைய சந்திப்பின்போது விரிவாக ஆலோசிப்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீண்ட கால நட்புறவு:

இந்தியா - சீனா இடையே நீண்ட கால நட்புறவு இருக்கிறது, அந்த உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை காலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் சீனப் பிரதமரை வரவேற்றனர். முன்னதாக, முப்படைகள் அணிவகுப்பு மரியாதையை சீன அதிபர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீன அதிபர், "இந்தியா - சீனா இடையே நீண்ட கால நட்புறவு இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். சீன அதிபராக இந்தியாவுக்கு முதல் முறையாக நான் வந்துள்ளேன். முதல் பயணம் வெற்றிகரமாக அமையும் என நான் நம்புகிறேன்" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று அவர் சந்தித்து பேசுகிறார். வர்த்தகம், பாதுகாப்பு, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x