Last Updated : 28 May, 2019 12:28 PM

 

Published : 28 May 2019 12:28 PM
Last Updated : 28 May 2019 12:28 PM

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இளைஞர்களுக்கும் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு: ஓபிஎஸ் மகனுக்கு இடம் கிடைக்குமா?

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் அதிகமாக இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமாருக்கு இடமளிக்கப்படுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் 314 புதிய முகங்கள் எம்.பி.க்களாக இருந்தனர். 17 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளுக்கு முடிந்து அதன் முடிவுகள் மே 23-ல் வெளியானது. இதில், சுமார் 300 பேர் முதன்முறை எம்.பி.க்கள் மற்றும் புதுமுகங்கள் ஆவர். இதன் காரணமாக, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அதிகமாக இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், கூட்டணிக் கட்சிகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவர்களின் எம்.பி.க்களையும் தனது அமைச்சரவையில் இடமளிக்க உள்ளார் பிரதமர் மோடி.

இதில், தமிழகக் கூட்டணியில் வெற்றிபெற்ற அதிமுகவின் ஒரே ஒரு வேட்பாளரான ரவீந்திரநாத் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. தமிழகத்தின் தேனி தொகுதி எம்.பி.யான அவர் இணை அமைச்சராகலாம். தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவினர் எவரும் வெற்றி பெறவில்லை. எனவே, மத்திய அமைச்சரவையில் தமிழகமும் இடம்பெற ரவீந்திரநாத் குமாருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும், தனது அமைச்சரவையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என பிரதமர் மோடியும் விரும்புவதாகக் கருதப்படுகிறது. தனது கூட்டணிக் கட்சிகளுக்கும் அவர் வாய்ப்பளிக்க விரும்புகிறார்.

பிஹாரில் மீண்டும் தம் கூட்டணியில் இணைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம். இம்மாநிலத்தை போல் மேற்கு வங்கமும் சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க உள்ளது. எனவே, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக பெற்ற எம்.பி.க்களில் அதிக அமைச்சர்கள் வரக்கூடும். இங்கு பாஜகவிற்கு ஒரே முஸ்லிம் எம்.பி.யாக சவுமித்ரா கான் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.சவுமித்ராவிற்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தமுறை ஐந்து முஸ்லிம்களை பாஜக போட்டியிட வைத்தது.

பிஹாரின் லோக் ஜனசக்தி கட்சிக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட உள்ளது. அக்கட்சியின் நிறுவனர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வானும் அமைச்சரவையில் சேருவார் எனத் தெரிகிறது. இரண்டாவது முறை எம்.பி.யான சிராகுடன் சேர்த்து பிஹாரில் அவரது கட்சிக்கு ஆறு எம்.பி.க்கள் உள்ளனர். பிஹாரின் சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிலிருந்து அதிகம் பேர் அமைச்சரவையில் இடம்பெற உள்ளனர்.  

கடந்தமுறை அமைச்சராக இருந்த சில மூத்த தலைவர்களுக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது. இதற்கு கட்சியிலும் பெரிதாக எதிர்ப்புகள் வர வாய்ப்புகளும் இல்லை. ஏனெனில், மீண்டும் தேர்தலில் போட்டியிட பாஜகவின் பல மூத்த தலைவர்களுக்கு இந்தமுறை வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதில், முன்னாள் துணை பிரதமர் எல்.கேஅத்வானி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர்களான முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, மக்களவை சபாநாயகரான சுமித்ரா மஹாஜன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கும் பாஜகவில் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழவில்லை. புதிய அமைச்சரவையில் நிதித்துறை பெறுவது யார் என்பதில் பலருக்கும் பெரிய ஆர்வம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய அமைச்சரான அருண் ஜேட்லி மாற்றப்படுவாரா? எனும் கேள்வியும் நிலவுகிறது. இவருக்குப் பதிலாக அப்பதவியின் பொறுப்பில் இருந்த ரயில்வே துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயலுக்கு கிடைக்கும் என்ற பேச்சுகளும் கிளம்பியுள்ளன. பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு காரணமான அதன் தேசியத் தலைவர் அமித் ஷாவிற்கும் முக்கிய இலாகா அளிக்கப்பட உள்ளது. இவருக்கு உள்துறை அளிக்கப்பட்டு அதில் உள்ள ராஜ்நாத் பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த முறை இருந்த 5 சதவீத பெண் உறுப்பினர்கள் தற்போது 14 என உயர்ந்துள்ளனர். எனவே, பெண்களுக்கு புதிய அமைச்சரவையில் கடந்தமுறையை விடக் கூடுதலாக அமர்த்தப்படலாம்.  இதுபோல், பல வியப்புக்குரிய பல மாற்றங்களுடன் பிரதமர் மோடியின் அமைச்சரவை இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதன் விவரம் வரும் மே 30-ன் மாலைக்குள் தெரிந்து விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x