Published : 26 May 2019 12:00 AM
Last Updated : 26 May 2019 12:00 AM
அண்மையில் முடிந்த மக்களவைத் தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார். இதில் பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் வெற்றிபெற்ற நிலையில் பிரகாஷ் ராஜ் 28,906 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இதனால் தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளதாக வருத்தத்துடன் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் பிரகாஷ் ராஜ் நேற்று பெங்களூருவில் கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக பெங்களூரு முழுக்க பயணித்து மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசப் பக்தியையும், வெறுப்பையும் ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து பெருவாரியாக வெற்றிபெறச் செய்துள்ளனர். மக்களின் இந்த முடிவை ஏற்கிறேன்.
அதேவேளையில் நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூரு மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள்.
எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன். அடுத்த ஓராண்டில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களமிறக்கி, சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சியை நடத்துவதற்கு பணம் தேவைப்படுவதால் திரைப்படங்களில் நடிப்பது அவசியமாக உள்ளது. இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT