Published : 23 May 2019 01:09 PM
Last Updated : 23 May 2019 01:09 PM
2019 மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கோட்டையான அமேதி தொகுதி பாஜக வசம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சற்று முன் வரை பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி 5000த்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அமேதி தொகுதி மக்களிடையே ராகுல் காந்தி- ஸ்மிரிதி இரானி போட்டி காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது, அதாவது அங்கு ரிக்ஷா இழுப்பவர்கள் முதல் பலதரப்பட்டவர்களும் தங்களிடையே காரசாரமான உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி குடும்பத்தின் கோட்டை என்று கருதப்படும் அமேதியில் கோட்டை தகரும் என்று ஒவ்வொருவரும் தங்களிடையே நட்பு ரீதியாக பந்தயம் கட்டும் அளவுக்கு அங்கு இந்த தேர்தல் சுவாரசியமாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசிகள் கூட பாஜகவும் ஸ்மிரிதி இரானியும் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை மேற்கொண்டனர் என்பதை ஒப்புக் கொண்டனர். தேசியவாதம், மதவாதம், தேசப்பாதுகாப்பு உள்ளிட்டவை பாஜக பிரச்சாரத்தில் ஆட்சி செலுத்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் பிரச்சாரம் அன்றாடப் பிரச்சினைகளான வேலை வாய்ப்பு, பொருளாதாரச் சறுக்கல், விவசாயிகள் பிரச்சினை என்ற ரீதியில் இருந்தது.
ஆனால் காங்கிரஸார் தொகுதி மக்களுடன் ஒன்றவில்லை, மாறாக ஸ்மிரிதி இரானி தொகுதி மக்களுடன் ஒன்றிப்போனார் என்று காங்கிரஸ்காரர்களே கூறுகின்றனர்.
ஆனாலும் காங்கிரஸ் ஆதரவாளர் ராம் அபிலாஷ் துபே காங்கிரஸ் வெல்லும், ராகுல் காந்தி வெல்வார் என்று நம்பிக்கை இழக்காமல் பிடிஐயிடம் தெரிவித்தார், அப்படிக் கூறினாலும் வாக்குகள் இடைவெளி குறைவாகவே இருக்கும் என்கிறார்.
பாஜக ஆதரவாளர் ஷிவ் பூஜன் பாண்டே, ஸ்மிரிதி இரானி தொகுதிக்கு அர்ப்பணிப்புடன் இருந்தார், 2014-ல் தோற்றாலும் தொகுதி மக்களுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார் இரானி என்கிறார்.
தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்கள் இன்னமும் அமேதி காங்கிரஸ் குடும்பத்தின் ஒரு விரிவே என்று கருத பாஜக தொண்டர் அருண் சிங் “காங்கிரஸ் தலைவர் (ராகுல்) மிஸ்ஸிங் எம்பி. ஆனால் ஸ்மிரிதி ‘தீதி’ நிச்சயம் வெற்றி பெற்று தொகுதியைக் கைப்பற்றுவார்” என்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் கூறுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT