Published : 30 May 2019 12:01 PM
Last Updated : 30 May 2019 12:01 PM
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அமையும் பாஜக கூட்டணி அரசில் சிவசேனா சார்பில் அரவிந்த் சாவந்த் அமைச்சராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் சேர்ந்து மத்திய அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
தற்போதைய மத்திய அமைச்சர்களில் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் போன்றோர் மீண்டும் அமைச்சராக விரும்பவில்லை.
பாஜக பெறும் வெற்றி பெற்ற மேற்குவங்கம், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கூட்டணிக்கட்சிகளை பொறுத்தவரை ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, அகாலிதளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அவர்களுக்கு எத்தனை இடங்கள் என்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கூட்டணிக் கட்சிகளுகளுக்கு ஓரிடம் வழங்க முடிவெடுக்கப்பட்டதாக சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில் ‘‘பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது. இதில் கூட்டணிக்கட்சிகள் சார்பில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சிவசேனா சாரபில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு வென்ற அரவிந்த் சாவந்த் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிவசேனா சார்பில் அவர் அமைச்சர் பதவியை ஏற்பார்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT