Published : 25 May 2019 07:14 PM
Last Updated : 25 May 2019 07:14 PM
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மோடி, புதிய உற்சாகத்துடன் புதிய தொடக்கத்தை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற கட்சித் தலைவராக பிரதமர் மோடி முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மோடியை அகாலிதள கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் முன்மொழிந்தார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வழி மொழிந்தனர். இதனைத் தொடர்ந்து ஏக மனதாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக முறைப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பிறகு அவர் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. முதன்முறையாக வெற்றி பெற்று வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னை அனைவரும் ஒன்றாக கூடி தலைவராக தேர்வு செய்துள்ளீர்கள்.
நான் உங்களில் ஒருவன். உங்களை போலவே தான் நானும். அதிகமான வெற்றி பெற்றதன் மூலம் அதிகமான பணிகள் இருப்பதை நான் உணர்கிறேன். புதிய பயணம் தொடங்கியுள்ளது. புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியை புதிய உற்சாகத்துடன் தொடங்குவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT