Published : 09 May 2019 02:39 PM
Last Updated : 09 May 2019 02:39 PM
‘என்னை பிரதமராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறியதன் மூலம் அரசியல் சட்டத்தையே மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார்’ என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 6-ம் கட்ட தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஹரியாணா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள பன்குரா பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:
புயலின் போது எனது தொலைபேசி அழைப்பை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகாரிகளுடன் இணைந்து புயல் பாதிப்புகள் பற்றி விவாதிக்க மத்திய அரசு விரும்பியது. ஆனால், இதற்குகூட மம்தா பானர்ஜி ஒப்புக்கொள்ளவில்லை.
நாட்டின் பிரதமரான என்னை ஏற்க மாட்டேன் என்று வெளிப்படையாக மம்தா பானர்ஜி அறிவிக்கிறார். ஆனால், இம்ரான் கானை பாகிஸ்தான் பிரதமராக பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார். இது இந்திய அரசியல் சட்டத்தையே இழிவுபடுத்துகிறார். தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் அவரை வாட்டுகிறது.
மேற்குவங்கத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு துளியும் இல்லை. மாநில மக்களைவிட தங்கள் குடும்பத்தினரை வளப்படுத்தவே மம்தா பானர்ஜி விரும்புகிறார். இந்த தேர்தலில் மக்கள் அவருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT