Last Updated : 02 Apr, 2019 05:53 AM

 

Published : 02 Apr 2019 05:53 AM
Last Updated : 02 Apr 2019 05:53 AM

ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை

இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. உல கில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நம்நாட்டுக்கு முக்கிய தேவை யான தொலைத்தொடர்பு, தொலை யுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. மேலும், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.

தொடர் சாதனைகள் மூலம் விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடு களுக்கு இணையாக இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ என்ற நவீன மின்னணு நுண்ணறிவு செயற் கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது.

இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டது. ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து திட்டமிட்ட படி ஆந்திர மாநிலம் ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவு தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக் கெட் நேற்று காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் தரையில் இருந்து புறப் பட்ட 17 நிமிடத்தில் ‘எமிசாட்’ 749 கி.மீ. துாரத்தில் புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின் ராக்கெட் இறுதிநிலை யான பிஎஸ் 4 இயந்திரம் 2 மணி நேரம் பயணித்து 505 கிமீ தொலை வில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள் களையும் நிலை நிறுத்தியது.

தொடர்ந்து பிஎஸ்4 இயந்திரம் படிப்படியாக மற்றொரு சுற்றுப் பாதைக்கு உந்தித் தள்ளப்பட்டு, சோதனைரீதியாக அதில் வைக் கப்பட்டிருந்த 3 ஆய்வு சாதனங் கள் 485 கிமீ துாரத்தில் நிலைநிறுத் தப்பட்டன. ஒட்டுமொத்தமாக 3 மணி நேரத்துக்குப் பின்னர் பிஎஸ்எல்வியின் பயணம் வெற்றிப் பயணமானது.

அதன்படி 3 வெவ்வேறு சுற் றுப்பாதைகளில் செயற்கைக்கோள் களை நிலைநிறுத்த ராக்கெட் இறுதி நிலை இயந்திரம் நான்கு முறை நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.

‘எமிசாட்’ செயற்கைக்கோள் 436 கிலோ எடை கொண்டது. மின்காந்த அலைக்கற்றைகளை துல்லியமா கக் கண்காணிக்கும் திறன் கொண் டது. நமது ராணுவத்தின் உளவுப் பணிகளுக்கும், பிற நாடுகளின் தக வல் தொடர்பு அமைப்புகளைக் கண்டறியவும் இது பயன்படுத் தப்படும்.

மேலும், நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் ரேடியோ அலைக்கற்றைகள் உள்ளிட்ட அனைத்துவித தகவல் தொடர்பு களைக் கண்காணிக்க உதவும். உள்நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மைய நேரடி கட்டுப்பாட் டில் இயங்கும். மேலும், பரி சோதனை முயற்சியில் 6 மாதம் ஆயுட்காலம் கொண்ட 3 ஆய்வு சாதனங்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் இஸ்ரோ தயாரித்த ஏஐஎஸ் ஆய்வு சாதனம் கடல் பகுதிகளில் தகவல் தொடர்பு குறித்து ஆய்வு செய்யும்.

அமெச்சூர் ரேடியோ சேட்டி லைட் கார்ப்பரேஷன் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஏபிஆர்எஸ் சாதனம் ரேடியோ தகவல் தொடர்பு ஆய்வுக்குப் பயன்படும். இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐஎஸ்டி) மாணவர்கள் தயாரித்த ஏஆர்எஸ் சாதனம் விண்வெளி ஆய்வுக்கு பயன்படும்.

இந்த வெற்றியின் மூலம் விண்வெளித் துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் அதிக செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு திறன் பலம் அடையும்

நமது நாட்டின் பாதுகாப்பு திறனை பலப்படுத்தவும், அது சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கும் மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ராணுவப் பயன்பாட்டுக்காக தயாரிக் கப்பட்ட பிரத்யேக ‘ஹைசிஸ்’, ‘மைக்ரோசாட்- ஆர்’ உள் ளிட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

தொடர்ந்து மிஷன் சக்தி திட்டம் மூலம் ஏவுகணை கொண்டு செயற்கைக்கோளை வீழ்த்தும் தொழில் நுட்ப சோதனையும் சமீபத்தில் வெற்றிகரமாக நிகழ்த் தப்பட்டது. அந்த வரிசையில் அண்டை நாடுகளின் தகவல் தொடர்பைக் கண்காணிக்க டிஆர்டிஓ மையம் 2013-ல் ‘காதுல்யா’ என்ற திட்டத்தை செயல்படுத் தியது. அதன்படி ராணுவ உளவுப் பணிகளுக்கு விண் ணில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த திட்ட மிட்டது. அதன்படி எமிசாட் இப்போது ஏவப்பட்டு உள் ளது. இதன்மூலம் எல்லையில் நிறுவப்பட்டுள்ள எதிரி நாட்டு ‘ரேடார்’ உள்ளிட்ட தகவல் தொடர்பு மையங் களைக் கண்டறிய முடியும். அதாவது அண்டை நாடு களில் எத்தனை தொலைத்தொடர்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதைக் கண்டறிவதுடன், குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் தொலைத் தொடர்பு சாதனங்களை இடைமறித்து பயனர்களின் உரை யாடலையும் கண்காணிக்க முடியும்.

முக்கிய அம்சங்கள்

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மிக நீண்ட பயண நேரம் கொண்ட ஏவுதல் இதுவாகும். இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு ஜனவரியில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி - சி40 ராக்கெட் பயண நேரம் 2 மணி 20 நிமிடம் வரை நீடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

பிஎஸ்எல்வி ஏவுதலில் வணிகரீதியாக அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துனியா ஆகிய வெளி நாடுகளைச் சேர்ந்த 220 கிலோ எடை கொண்ட 28 நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத் தப்பட்டன. இதில் அமெரிக்காவின் பிளானட் எர்த் அப்சர்வேஷன் நெட்வொர்க் நிறுவனத்தின் பிளாக் 4ஏ வகை 20 செயற்கைக் கோள்களும் அடங்கும். இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான சிறிய செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x