Last Updated : 01 Apr, 2019 04:38 PM

 

Published : 01 Apr 2019 04:38 PM
Last Updated : 01 Apr 2019 04:38 PM

காங்கிரஸ் ஐ.டி.பிரிவு தொடர்புடைய 687 பக்கங்கள், கணக்குகள் நீக்கம்: ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி

காங்கிரஸ் தகவல்தொழில் நுட்பப் பிரிவோடு தொடர்புடைய தனிமனிதர்களின் 687 பக்கங்கள், கணக்குகளை முடக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், இந்த பக்கங்கள், கணக்குகள் நீக்கப்பட்டது போலியான தகவலை, செய்திகளை பரப்பியதால் அல்ல, ஆனால், தவறான நடத்தையின் காரணமாக, வைரஸ்(ஸ்பாம்) பரப்புவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு, இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் தவறான நடத்தையையும், வைரஸ்களையும் பரப்பிய 103 பக்கங்கள், குழுக்களின் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர்களை பாதிக்கும் வகையில் எந்தவிதமான செயல்களையும் செய்தாலோ அல்லது அனுமதித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்திருந்தது.

அதேசமயம். ஃபேஸ்புக்கில் அரசியல்ரீதியான விளம்பரங்கள் அளிக்கும் கட்சிகள், அரசியல்வாதிகளின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்படைத்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து வருகிறது. அதேசமயம், ஃபேஸ்புக் தளத்தில் போலியான செய்திகளைத் தடுக்கவும், வாக்காளர்கள் பாதிக்கப்படாமல் செய்ய தனிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

687 பக்கங்கள் முடக்கியது குறித்து ஃபேஸ்புக்கின் சைபர் பாதுகாப்பு கொள்கையின் தலைவர் நேதனியல் கிளீசியர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஃபேஸ்புக்கில் இருந்து  687 கணக்குகளையும், பக்கங்களையும் நாங்கள் நீக்கி இருக்கிரோம். பெரும்பாலான பக்கங்கள் தானியங்கி முறையில் கண்டுபிடிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டவை. இந்த கணக்குகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் தகவல்தொழில்நுட்பப் பிரிவோடு தொடர்புடைவர்களின் தனிப்பட்ட கணக்குகளாகும். இவர்களின் முறையற்ற நடத்தையால், கணக்குகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த பக்கங்களை நீக்குவதற்கு காரணம், இந்த கணக்கை பயன்படுத்தியவர்கள் தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து, நெட்வொர்க்கில் போலியான கணக்கை பயன்படுத்தி செயல்பட்டுவந்தவர்கள். இவர்கள் தவறான நடத்தையால்தான் இந்த கணக்குகள் நீக்கப்பட்டன தவிர போலியான செய்திகளை பரப்பியதால் அல்ல.முறையற்ற நடத்தையை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் நாங்கள் தொடர்ந்து நிலையாக பணியாற்றி வருகிறோம். ஏனென்றால், எங்களின் சேவையை யாரும் தவறாக பயன்படுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை.

காங்கிரஸ் கட்சியை அணுகி, நாங்கள் எவற்றையெல்லாம் கண்டுபிடித்தோம், அவர்கள் யாரோடு தொடர்புடையவர்கள் என்பது குறித்த விவரங்களை அளித்தோம். அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தோம். அரசும், எங்கள் நிறுவனமும் எந்த மாதிரியான நடத்தையை விரும்புகிறார்கள் என்பதையும் தெரிவித்தோம்.

வரும் மக்களவைத் தேர்தல் குறித்த செய்திகள், வேட்பாளர்கள் குறித்த பார்வை, எதிர்க்கட்சிகள் குறித்த விமர்சனங்கள், குறிப்பாக பாஜககுறித்த விமர்சனம், காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் ஆகியவற்றை இந்த பக்கங்களின் உரிமையாளர்கள், அட்மின்கள் பதிவிட்டிருந்தனர் என்று விளக்கம் அளித்தோம். அவர்களின் தவறான நடத்தையை தெரிவித்தோம்.

இந்த தவறான நடத்தையில் ஈடுபட்டவர்கள் தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து போலியாக கணக்கு வைத்துள்ளார்கள். அந்த நபர்கள் அனைவரும் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பபிரிவோடு தொடர்புடையவர்கள் என்பதையும் தெரிவித்தோம்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் கணக்குகளை நீக்கிய வகையில், அந்த கணக்குகளின் உரிமையாளர்கள் போலியான கணக்கில் ராணுவத்துக்கு ஆதரவான பக்கங்கள், பாகிஸ்தானுக்கு ஆதாரவான பக்கங்கள், காஷ்மீர் குழுக்கள் குறித்த பக்கங்கள், பொழுதுபோக்கு , செய்திகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தனர்.

இந்த பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி இந்திய அரசு தொடர்பாகவும், அரசியல் தலைவர்கள், ராணுவம் தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த செய்திகளை வெளியிடும் நபர்கள் தங்களின் அடையாளத்தை மறைத்து இந்த பக்கங்களை நடத்தி வந்துள்ளனர். நாங்கள் விசாரித்த வகையில், இந்த பக்கங்களை நடத்தியவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

இவ்வாறு நாதனைல் கிளீசியர் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x