Published : 05 Apr 2019 04:11 PM
Last Updated : 05 Apr 2019 04:11 PM

‘‘தேர்தலில் போட்டியில்லை; இந்தூர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யட்டும்’’ - சுமித்ரா மகாஜன் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, இந்தூர் தொகுதியின் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்து கொள்ளலாம் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.

75 வயது தாண்டிய கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்காத பாஜக இந்தமுறை, தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக, முன்னாள் துணைப் பிரதமரான எல்.கே.அத்வானிக்கு (91) பதிலாக குஜராத்தின் காந்திநகரில் அமித்ஷா போட்டியிடுகிறார். அதேபோல், கான்பூரின் எம்பி.யான முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிக்கு (85) பதிலாக உபி அமைச்சரான சத்யதேவ் பச்சோரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மீது அறிக்கை வெளியிட்ட ஜோஷி, தன்னை போட்டியிட வேண்டாம் என பாஜக நிர்வாகிகள் வற்புறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதுபோலவே, கல்ராஜ் மிஸ்ரா இந்த முறை தான் போட்டியிடப்போவதில்லை என என முன்கூட்டியே அறிவித்து விட்டார்.

இந்தவரிசையில், மக்களவை யின் சபாநாயகரான சுமித்ரா மகாஜனுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. போட்டியில் இருந்து விலகும்படி வலியுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். என்னிடம் தெரிவிக்க கட்சி தயங்குவதாக தெரிகிறது, எனவே முடிவு எடுங்கள் என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், போட்டியிலிருந்து விலகுகிறேன் என சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மக்களால் ‘தாய்’ என அன்புடன் அழைக்கப்படுபவருக்கு வரும் ஏப்ரல் 12-ல் 76 வயது நிறைவடைய உள்ளது. எனினும் அவரது உண்மையான வயது 78 எனக் கூறப்படுகிறது. கடந்த 1989 முதல் பாஜகவின் கோட்டையாக இருக்கும் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் எட்டாவது முறை எம்பி.யாக சுமித்ரா உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x