Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM

‘பாகுபலி’ பல்லால தேவனை போலாகிவிட்டார்: சந்திரபாபு நாயுடு மீது பிரதமர் மோடி விமர்சனம்

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி உள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், அமராவதி அருகே உள்ள ராஜமகேந்திரவரம் பகுதியில் பாஜக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, முதலில் தெலுங்கில் பேசி மக்களின் கைத்தட்டல்களை பெற்றார்.

பின்னர் அவர் பேசியதாவது: மகாபாரதத்துக்கு ஜன்மம் அளித்த ராஜமகேந்திரவரம் மண்ணுக்கு தலை வணங்குகிறேன். ஆதிகவி நன்னய்யா, கந்துகூரி வீரேசிலிங்கம், தாமெர்ல ராமா ராவ் ஆகியோர் அவதரித்த பூமி இது. காகிநாடா பொலிவுறு (ஸ்மார்ட்) நகரமாக மாற்றப்படும் என அறிவித்தோம். கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் வரி உயர்த்தப்படவில்லை. கோடானுகோடி பேர் முறையாக வரி செலுத்துவதால்தான் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடிகிறது. ஆதலால், உரிய நேரத்தில் முறையாக வரி செலுத்துபவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரூ. 5 லட்சம் வரை வருமான வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் (நேற்று) அமலுக்கு வந்துள்ளது. 5 ஆண்டுகளில் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி உள்ளோம்.

போலாவரம் அணையின் கட்டுமானப் பணி கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடி வரை நிதி உதவி செய்துள்ளது. ஆனாலும் தெலுங்கு தேசம் தலைமையிலான மாநில அரசு, அணையின் கட்டுமானப் பணிகளை தாமதம் செய்து வருகிறது. பாபுவின் நிலைமை, ‘பாகுபலி’ படத்தின் பல்லால தேவனை போல ஆகிவிட்டது. அதர்மம், அநீதியை சார்ந்தே சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நடைபெறுகிறது. இவரது பொய் பிரச்சாரத்தை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள். தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் அவரவர் குடும்பங்களுக்காக அரசியல் நடத்துகின்றனர். ஆனால், நாங்கள் எதிரியின் இடத்துக்கே சென்று போரிட்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்பு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x