Last Updated : 24 Apr, 2019 04:52 PM

 

Published : 24 Apr 2019 04:52 PM
Last Updated : 24 Apr 2019 04:52 PM

மக்கள் பிரச்சினைகளில் இருந்து விலகி நிற்கும் பாஜக: பிரியங்கா காந்தி சாடல்

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக அரசு மத்தியிலும் சரி உ.பி.யிலும் சரி மக்கள் பிரச்சினைகளில் இருந்து விலகியே நிற்கிறது எனக் கூறியுள்ளார்.

பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

''காங்கிரஸ் கட்சியின் கொள்கை மக்களின் எண்ணங்களுக்கு குரலாக இருப்பது. ஆனால், பாஜகவின் கொள்கை அப்படியே எதிர்மறையானது. பாஜக மத்தியிலும் சரி, உ.பி.யிலும் சரி மக்கள் பிரச்சினைகளில் இருந்து விலகியே நிற்கிறது. காவி கட்சியான பாஜக மக்களுடன் தொடர்பறுந்து நிற்கிறது.

பிரதமர் மோடி தனது பதவிக்காலத்தின் அதிக நாட்களை வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலேயே கழித்தார். சாதாரண மக்களை எப்போதாவதே சந்தித்தார்.

பெரும் முதலாளிகளின் துணையுடன் தனது கொள்கைகளை விளம்பரப்படுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. அந்தப் பிரச்சாரமும் செய்யாதவற்றை செய்ததாகச் சொல்லும் போலி பிரச்சாரம். இது உத்தரப் பிரதேசத்தில் கண்கூடாகத் தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்குப் பின்னர் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. பணமதிப்பு நீக்கம் சாமான்ய மக்களையே வெகுவாகப் பாதித்துள்ளது. அவர்கள் சொன்னதுபோல் கறுப்புப் பணம் ஏதும் மீட்கப்படவில்லை. பாஜக அரசு பெரும் முதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அதன் மதிப்பு ரூ.5,50,000 கோடி. ஆனால், எங்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏழை எளிய மக்களுக்காக நியாய் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்''.

இவ்வாறு பிரியங்கா பேசினார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள். அதனாலேயே உ.பி. பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உ.பி.யில் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 26 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் எஞ்சியுள்ள தொகுதிகளில் அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x