Published : 13 Apr 2019 01:42 PM
Last Updated : 13 Apr 2019 01:42 PM
ஆசிரியர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கட்டாய நிலையை உருவாக்கியது மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுதான் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் நடுநிலைப் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜேஷ் குமார் படேல் கடந்த புதன் அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் பண நெருக்கடியில் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் பள்ளியில் மூன்று மாத மதிப்பூதியம் வழங்கப்படாததே என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிரியங்கா காந்தி இன்று ட்விட்டர் பதிவில், ''பண்டா மாவட்டத்தில் நடந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தள்ளியுள்ளது. கடினமாக உழைக்கும் அவர்கள் கடும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். பாஜக ஆசிரியர்களை ஏமாற்றிவிட்டது.உத்தரப் பிரதேச மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள்'' என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகளில் பிரியங்கா காந்தி தனிக்கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT