Last Updated : 11 Apr, 2019 04:53 PM

 

Published : 11 Apr 2019 04:53 PM
Last Updated : 11 Apr 2019 04:53 PM

ராகுல் காந்திக்கு அச்சுறுத்தல்: ஸ்னைஃபர் கன் லேசர் ஒளி வந்ததாக காங்கிரஸ் புகார்: மத்திய அரசு மறுப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது ஸ்னைஃபர் துப்பாக்கியில் பயன்படும் லேசர் ஒளி 7 முறை பாய்ச்சப்பட்டதால் அவருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் நேற்று ராகுல்காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அவரின் தலை, முகம் ஆகிய பகுதியில் 7 முறை பச்சை நிறத்தில் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதாக வீடியோ காட்சிகள் வெளியாகின.

ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்திய ஆகியோர் கொல்லப்பட்ட காரணத்தால், ராகுலுக்கு சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

அமேதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகளை இணைத்து மத்திய உள்துறைக்கு  காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.  அதில் ராகுல் காந்தியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பாதுகாப்பில் மெத்தனமாக இருக்கும் உத்தரப்பிரதேச அரசு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்  என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கூறுகையில், " அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, 7 முறை வெவ்வேறு இடங்களில் இருந்து அவர் மீது பச்சை நிற லேசர் ஒளிபட்டது. அது எந்த ஒளி என்று வீடியோ மூலம் ஆலோசித்தபோது, ஸ்னைஃபர் துப்பாக்கியில் (தூரத்திலிருந்து லென்ஸ் மூலம் குறிபார்த்து சுடும் துப்பாக்கி) இருந்து வந்த ஒளி என அறிந்தோம். ராகுல் காந்திக்கு பாதுகாப்பை பலப்படுத்தக்கூறி உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதியுள்ளோம் " எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம், எஸ்பிஜி இயக்குநரிடம் ஆலோசனை நடத்தியதில், அது ஸ்னைஃபர் துப்பாக்கியின் லேசர் ஒளி அல்ல, செல்போனின் ஒளி. ராகுலின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " காங்கிரஸ் கட்சியின் புகைப்படக் காரர் பயன்படுத்திய கேமிராவில் இருந்து வெளியான வெளிச்சம்தான் ராகுலின் முகத்தில் பட்டுள்ளது. ஸ்னைஃபர் துப்பாக்கி லேசர்ஒளி அல்ல. ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என உள்துறை அமைச்சகத்திடம் எஸ்பிஜி பிரிவினர் தெரிவித்துவிட்டனர் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x