Last Updated : 08 Apr, 2014 12:00 AM

 

Published : 08 Apr 2014 12:00 AM
Last Updated : 08 Apr 2014 12:00 AM

ராமர் கோயில், பொது சிவில் சட்டம்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

நல்லாட்சி அளிக்கப்படும், ராமர் கோயில் கட்டப்படும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், ரவிசங்கர் பிரசாத், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

அசாம், திரிபுரா மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில், தனது தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

நல்லாட்சி அளிக்கப்படும், அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயிலை கட்டுவதற்கான வழிவகைகள் ஆராயப்படும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, பின்தங்கிய 100 புதிய நகரங்கள், புல்லட் ரயில் வசதியை ஏற்படுத்துதல், அனைவருக்கும் சமையல் எரிவாயு விநியோகிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், குறைந்த விலையில் வீட்டு வசதி ஏற்படுத்தித் தருதல், மகளிர் பாதுகாப்பு, தேசிய விவசாய சந்தை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பாஜக தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், “கிராமம் முதல் நகரம் வரை உள்ள அறிவுஜீவிகள், பெண்கள், விவசாயிகள், குழந்தைகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் யோசனைகளுடன் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளோம். இதற்காக, ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் இருந்து யோசனைகளை கேட்டறிந்தோம்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை, கருப்புப்பணம், முறையற்ற நிதி ஒதுக்கீடு ஆகிய பிரச்சினைகள் உள்ளன. பல்வேறு திட்டங்களில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி, கீழ்மட்டம் வரை போய்ச்சேரவில்லை” என்றார்.

ராமர் கோயில் அமைப்பது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, பொது சிவில் சட்டம் அமல் ஆகிய அறிவிப்பு குறித்து கேட்டபோது, “இதற்கும் இந்துத்துவாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்” என்றார் ஜோஷி.

பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “இது வெறும் சம்பிரதாயத்துக்காக வெளியிடப் படும் அறிக்கை அல்ல. இதில் கூறப் பட்டுள்ளதை கட்டாயம் நிறைவேற்று வோம். முந்தைய தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியை நிறைவேற்றியிருந்தாலும், இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்றியிருக்க முடியும்.நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, அவரை ஏதோ தீண்டத்தகாதவர் போல பலரும் பேசினர். இந்திய அரசியலில் மோடியை போல விமர்சனத்திற்குள்ளான தலைவர்கள் யாரும் இல்லை” என்றார்.

மோடி அளித்த 3 வாக்குறுதிகள்

பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்பு, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சிக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்போம்.

மக்களுக்கு மூன்று முக்கிய வாக்குறுதிகள் அளிக்க விரும்புகிறேன். கட்சி என் மீது நம்பிக்கை வைத்து அளித்துள்ள பணிகளையும், தேர்தல் வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றுவேன். யாரையும் பழிவாங்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன். எனக்கென தனியாக எதையும் செய்துகொள்ள மாட்டேன்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* இந்திய கலாச்சாரத்தின் புராதன சின்ன மாக ராமர் பாலம் திகழ்கிறது. அப்பகுதியில் ஏராளமான தோரிய கனிம வளம் உள்ளது. எனவே, இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

* உள்ளுர் தொழில்கள் பாதிக்காத வகையில், சில்லறை வணிகத்தில் அன் னிய முதலீட்டை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரி விதிப்பு எளி மைப்படுத்தப்படும்.

* தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம், நாடு முழு வதும் அமல்படுத்தப்படும். புல்லட் ரயில் கள் இயங்கும் வகையில் நகரங்களுக்கு இடையே வைர நாற்கரத் திட்டம் கொண்டு வரப்படும்.

* தேசிய அளவிலான பதுக்கல், கள்ளச் சந்தை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். விலை வாசியை நிலைப்படுத்தி கண்காணிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். விவசாய தேசிய சந்தை அமைக்கப்படும்.

* ஊழலை ஒழிக்கவும், வெளி நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கிவைக்கப் பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* மத்திய, மாநில அரசுகளிடையே இணக்க மான உறவை பராமரிக்கவும், மாநிலங்கள் இடையே பிராந்திய கவுன்சிலை உருவாக்கி பொதுவான பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீதிபதிகளை நியமிக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண் களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்ய சட்ட மியற்றப்படும். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு முடிவு கட்டப்படும். குறைந்த விலை வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* முஸ்லிம் மதத்தினரின் மதரஸாக்களை நவீனப்படுத்தவும், வக்பு வாரியத்தை சீர மைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உருது வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம், மத நல்லிணக்கத்துக்கான ஆலோசனை அமைப்பு ஆகியவை கொண்டு வரப்படும். மதரஸாக்களில் கணிதம், அறிவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.பொரு ளாதார வளர்ச்சியை ஏற்படுத் துதல், நிர்வாக முடக்கத்துக்கு முடிவு கட்டுதல், தொழில்துறை ஒப்புதல்களுக்கு ஒற்றைச் சாளர முறையை கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

* இந்தியாவுக்கு முதலிடம் என்பதே அரசின் கொள்கையாகவும், மதமாகவும் இருக்கும்.

* மக்களின் நலனே அரசின் பிரார்த்தனையாக இருக்கும். ஒரே இந்தியா, வளமான இந்தியா என்பதே பாஜகவின் கோஷம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x