Last Updated : 05 Apr, 2019 07:29 AM

 

Published : 05 Apr 2019 07:29 AM
Last Updated : 05 Apr 2019 07:29 AM

இளம்பெண்களை பலாத்காரம் செய்யும் கொடுமை.. எங்கள் கடவுள்களை வணங்க முடியாத நிலை.. ‘எங்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்கவே இந்தியா வந்தோம்’- பாகிஸ்தானில் வாழ முடியாமல் டெல்லியில் வந்து தங்கியுள்ள அகதிகள் கதறல்

பாகிஸ்தானில் இளம் பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்படுவதாகவும் இந்துக் கட வுள்களை வழிபடும் உரிமை இல்லை என்றும் பாகிஸ்தானில் இருந்து வந்து டெல்லியில் தங்கியுள்ள அகதிகள் கண் ணீர் மல்க தெரிவிக்கின்றனர். ‘எங்களின் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவே இந்தியா வந்தோம்’ என்று அவர் கள் கூறுவது நெஞ்சைப் பிசையத்தான் செய்கிறது.

பாகிஸ்தானில் வாழமுடியாமல் அகதி களாக வந்த 500-க்கும் மேற்பட்டோர் டெல்லியின் அகதிகள் முகாம்களில் ஒன்றான மஜ்னு கா டில்லாவில் தங்கியுள் ளனர். அவர்களிடம் ‘இந்து தமிழ்’ நாளி தழ் நேரடியாக சென்று சேகரித்த செய்தி இது. அவர்களின் துயரங்கள் இங்கே..

டெல்லியின் வடமேற்கு பகுதியின் யமுனை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள ‘மஜ்னு கா டில்லா’ ஒதுக்குப்புறமான பகுதி. இங்குள்ள சீக்கியர்களின் குரு த்வாராவில் பாகிஸ்தானில் இருந்து 2011-ல் வந்த 140 பேர் அகதிகளாகத் தங்கி விட்டனர். பின்னர், அருகில் அமைக்கப் பட்ட காலனிக்கு இன்னும் தொடர்ந்து இந்தியா வரும் அகதிகளால் இவர்களின் எண்ணிக்கை இப்போது 500-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த காலனி, மனிதர்கள் வாழும் சூழல் அற்றதாக உள்ளது. மண்சுவர் மற்றும் தார்பாய் களால் அமைந்த வீடுகளுக்கு போது மானக் கழிப்பறைகள் இல்லை. மின்சார வசதியும் கிடையாது. கைப்பம்புகள் மட்டும் 2015-ல் அமைக்கப்பட்டன. அகதிகளுக்கு இடையில் உருவாகும் பிரச்சினைகளைத் தீர்க்க தங்களுக்குள் ‘பிரதான்’கள் எனப்படும் தலைவர்கள் 7 பேரை அமர்த்தியுள்ளனர். வெளியில் இருந்து வருபவர்களிடமும் இவர்களில் ஒருவரே பேசுகிறார்.

‘ராம்! ராம்!’ எனக் கூறி வணங்கிய ‘பிரதான்’களில் ஒருவரான தயாள் தாஸ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறுகை யில், ‘‘டெல்லியில் பிழைப்பது அன்றாடப் போராட்டமாக உள்ளது. அகதியான எங்கள் சூழலை நன்கு அறிந்தும் பாகிஸ் தானில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. தற்போது, ஓரே சமூகத்தின் 120 குடும்பங்களை சார்ந்த சுமார் 550 உறுப்பினர்கள் தங்கியுள்ளோம். நாங்கள் அனைவருமே பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத் மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள். அங்கு வேறு வேலை அளிக்கப்படுவதில்லை என்பதால் விவ சாயம் தவிர எந்த தொழிலும் எங் களுக்குத் தெரியாது. அகதிகள் என்ப தால் இங்கே ஒரு குறிப்பிட்ட சுற்ற ளவைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. எதிர்ப்புறம் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு அங்கன்வாடிகளில் எங்கள் குழந்தை கள் பயில அரசு வசதி செய்துள்ளது. மேல்படிப்புக்கு வாய்ப்பும் இல்லை. அதற் கான பணவசதியும் எங்களிடம் இல்லை’’ என்று கவலையுடன் விவரித்தார்.

இவர்களில் சில இளைஞர்கள் செல் போன் உறைகளை தள்ளுவண்டிகளில் வைத்து விற்றும் சிலர் சாலை ஓரங்களில் கரும்புச்சாறு, வீட்டுசாமான் விற்கும் கடைகளை அமைத்தும் வியாபாரம் செய்கின்றனர். பல ஆண்களுக்கு வேலையே இல்லாத நிலை.பெண்களின் நிலை மிகவும் பரிதாபம்.

அகதிகளில் ஒருவரான மோஹன் நம்மிடம் கூறும்போது, ‘‘1992 முதல் துவங் கிய நரக வாழ்க்கையில் இருந்து எங்களுக்கு இந்தியா வந்த பின்பே விடு தலை கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் எங்கள் பகுதியில் நாங்கள் இந்துக் கட வுள்களை வணங்க முடியாது. இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திடீர் திடீரென ஒரு பெண்ணை முஸ்லிம்கள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்யும் கொடுமை. அதிலும் சில பெண்களை விபச்சாரத்திற்காக விற்று நாடு கடத் துவது, மதரஸாக்களின் சில மவுலானாக் கள் பெண்களை மதம் மாற்றி தனது பல தாரங்களில் ஒருவராக மணமுடித்துக் கொள்வது ஆகியவை அங்கே சகஜம். எங்கள் பெண் குழந்தைகளின் எதிர் காலத்தை காக்கவே இந்தியா கிளம்பி வந்தோம்’’ எனக் கலங்கினார்.

இந்தியாவில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர்களுக்கு தெரிய வில்லை. இவர்களில் சிலருக்கு குடியுரிமை கிடைத்தாலும் தம் பாகிஸ் தான் அடையாளத்தால் பலர் பிழைக்க முடியாமல் இந்த முகாமிலேயே தங்கி உள்ளனர்.

இதுபற்றி‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஸ்ரவண் என்பவர் கூறுகையில், ‘‘குடி யுரிமை கிடைத்தாலும் பாகிஸ்தான் உள வாளி என எங்களை சந்தேகிப்பதை தடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் நாங்கள் பிரிவினைக்கு முன் ராஜஸ் தானின் சித்தோடில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்கள். இதற்காக, குடியரசு தலை வராக இருந்த அப்துல் கலாம் முதல் இப்போதைய டெல்லி முதல்வர் கெஜ்ரி வால், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வரை பலரையும் தொடர்ந்து சந்தித்து கோரிக்கை வைத்தும் பெரிய பலன் எதுவும் இல்லை’’ எனத் தெரிவித்தார்.

இவர்கள் குடும்பத்து பெண்களை இந்தியர்களுடன் மணமுடிக்கவும் ஒரு முயற்சி நடைபெற்றது. இந்த பெண்களை மணமுடிக்க உ.பி.யின் சஹரான்பூர் மாவட்டத்தின் தியோபந்த் அருகிலுள்ள மிர்க்பூர் கிராமத்து இந்து இளைஞர்கள் முன்வந்தனர். இதற்கான முயற்சியை, பாகிஸ்தானுக்கு அடிக்கடி செய்தி சேகரிக்கச் சென்றுவரும் பஞ்சாபி மொழி பத்திரிகையாளரும் சமூக சேவகரு மான சுரேந்தர் கோச்சட் மேற்கொண்டார். நன்கு படித்த மிர்க்பூர்வாசிகள் பாகிஸ் தான் பெண்களை மணமுடிப்பதால் அவர் களுக்கு விரைவாக இந்தியக் குடி யுரிமை கிடைக்கும் எனக் கருதினார். ஆனால், பாகிஸ்தான் அகதிகள் தங்கள் இளைஞர்களுக்கு முதலில் மிர்க்பூர் கிராமத்தினரின் பெண்களை மணமுடிக்க வேண்டினர். அந்த இளைஞர்களுக்கு வசதி, வேலை, கல்வி இல்லாமையால் முயற்சி வெற்றி பெறவில்லை.

பத்திரிகையாளர் சுரேந்தர் கோச்சட் கூறுகையில், ‘‘அயோத்தியில் 1992 டிசம் பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் தாக்கம் இந்தியாவைவிட பாகிஸ்தானில் அதிகமாக ஏற்பட்டது. இந்த சம்பவத் திற்கு பின் பாகிஸ்தானின் சிந்து மகாணத் தில் அதிகம் வாழும் இந்துக்கள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அப்போது சுமார் 1100 கோயில்கள் இடிக் கப்பட்டன. பல பகுதிகளில் இந்துக்கள் அளிக்கும் புகார்கள் மீது அந்நாட்டு போலீஸ் நடவடிக்கை எடுப்பதில்லை’’ என்றார்.

அகதிகளில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த இந்துக்கள் டெல்லியின் ஆதர்ஷ் நகரில் வசிக்கின்றனர். அகதிகளின் நிலை மையை உணர்ந்து உதவும் சில டெல்லி வாசிகள், பொதுநல அமைப்புகளால் அவர்களின் வாழ்க்கை நகர்கிறது. அகதிகள் தொடர்பான சட்டதிட்டங்கள் காரணமாக ஒரு கட்டத்துக்கு மேல் உதவ முடிவதில்லை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குடியுரிமை சட்டத்தில் செய்த சில திருத்தங்கள் அவர் களுக்கு சாதகமாக உள்ளது. அதன் முழுப் பலன்கள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாட்களை கடத்து கின்றனர் பரிதாபத்துக்குரிய இந்த அகதிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x