Last Updated : 04 Apr, 2019 06:12 PM

 

Published : 04 Apr 2019 06:12 PM
Last Updated : 04 Apr 2019 06:12 PM

மோடி மீண்டும் பிரதமரானால் நாடு சர்வாதிகார ஆட்சிக்கு மாறும்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை

பிரதமர் மோடி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் நிலவும் ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சர்வாதிகாரத்துக்கு மாற்றி விடுவார் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவிலிருந்து 683 கி.மீ. தொலைவில் நேபாளம், பூட்டான் அருகே உள்ள கூச் பெஹர் என்ற இடத்தில் இன்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:

''மோடியிடம், 'கொள்ளையடி'. 'கலகம் செய்', 'மக்களைக் கொல்' ஆகிய மூன்று கோஷங்களே உள்ளன.

வங்கதேசத்துடனான அறுபது ஆண்டு பிரச்சினைக்கு 2015-ல் திரிணமூல் காங்கிரஸ் தீர்வு கண்டது. ஆனால் சட்டப்பூர்வ குடிமக்களானவர்களை எல்லாம் அகதிகளாக மாற்றுவதற்கு பாஜக ஒரு குடிமக்கள் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது.

நாங்கள் (திரிணமூல் காங்கிரஸ்) ஒருபோதும் என்ஆர்சியை (குடிமக்களின் தேசியப் பதிவு) அனுமதிக்க மாட்டோம். யார் நாட்டில் இருக்க வேண்டும்? யார் வெளியேற வேண்டும் என்று மோடி ஒருவர் தீர்மானிக்க முடியாது. குடியுரிமை (திருத்தச்) சட்டம் என்பது இந்த நாட்டின் சட்டபூர்வ குடிமக்களை அகதிகளாக மாற்றுவதற்கான மற்றொரு சதி ஆகும். பாஜகவின் இந்த சதித் திட்டம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.

2014 மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த சாய்வாலா (டீக்கடைக்காரர்) இப்போது சவுக்கிதார் (காவலாளி) என்று பிரச்சாரத்தை மாற்றிக்கொண்டு மக்களை முட்டாளாக்கி வருகிறார்''.

இவ்வாறு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x