

கல்லூரியில் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் இதில் அரசு தலையிட வேண்டும் என்றும் முஸ்லிம் மாணவி ஒருவர் கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
புனித ஆக்னஸ் ப்ரீ யுனிவர்சிட்டி கல்லூரியில் மங்களூருவைச் சேர்ந்த மாணவி பியூ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கர்நாடக அரசின் கூடுதல் துணை ஆணையர் வெங்கடாசலபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கோரியுள்ளதாவது:
''நான் புனித ஆக்னஸ் ப்ரீ யுனிவர்சிட்டி கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறேன். முதலாம் ஆண்டில் நான் படிக்கும்போது கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் (தலையை மூடும் துணி) அணிய அனுமதித்தது. ஆனால் இந்த ஆண்டில் நான் ஹிஜாப் அணிந்து வந்தால், வகுப்பில் அனுமதிப்பதில்லை.
கல்லூரி நிர்வாகம் மற்ற மத உணர்வுகளை மதிக்க வேண்டும். மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும்''.
இவ்வாறு மாணவி பியூ கூறியிருந்தார்.
இதுதொடர்பாக கூடுதல் ஆணையர், ப்ரீ யுனிவர்சிட்டி துறையின் கூடுதல் இயக்குநர் (பொறுப்பு) எல்விரா ஃபிலமினாவிடம் அறிக்கை கோரியுள்ளார்.
இதுதொடர்பாக கல்லூரியின் தலைவர் ஷமிதா 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) கூறும்போது, ''கல்லூரி வளாகத்துக்குள் அனைத்து மாணவர்களும் சீருடை ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதன்படி அனைத்து வேலை நாட்களிலும் மாணவர்கள் கல்லூரிச் சீருடையை மட்டுமே அணிய வேண்டும்.
முதலாம் ஆண்டிலேயே சம்பந்தப்பட்ட மாணவியிடம் இதைக் கூறிவிட்டோம். ஆனால் அவர் அதை மீறி ஹிஜாப் அணிந்து வந்தார். இரண்டாம் ஆண்டுக்காக அவர் அனுமதி கோரியபோது, கல்லூரி சார்பில் சீருடை முறையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவரின் அப்ளிகேஷன் ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது'' என்றார்.