Published : 17 Apr 2019 03:49 PM
Last Updated : 17 Apr 2019 03:49 PM

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலை இழப்பு: ஆய்வில் தகவல்

2016-ம் ஆண்டு நவம்பர், 8-ம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அறிவித்தபின் கடந்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். கறுப்புபணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரமதர் மோடி தெரிவித்தார். இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

50 நாட்களில் மக்களிடையே பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று அரசு கூறிய நிலையில், இயல்புக்கு வர 6 மாதங்கள் ஆகியது. வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் பணத்தை பெறவும், எடுக்கவும் வரிசையில் நின்று நாடுமுழுவதும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்(ஏபியு) 'ஸ்டேட் ஆப் ஒர்க்கிங் இந்தியா' என்ற தலைப்பில் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தில்(சிஎம்ஐஇ) இருந்து தரவுகளைப் பெற்று இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இருந்தே வேலையின்மை அளவு படிப்படியாக அதிகரித்து, பணமதிப்பிழப்புக்குபின் 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 6 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுக்கு இடையே நாட்டின் வேலையின்மை இருமடங்கு அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் வேலையில் இருப்போரில் சதவீதம் அடிப்படையில் பணமதிப்பிழப்புக்கு முன் அதாவது 2016 ஜனவரி முதல் ஏப்ரல் இடையே 78 சதவீதமாக இருந்தது. ஆனால், 2018, டிசம்பர் மாதத்தில் 68 சதவீதமாக சரிந்துவிட்டது. அதேபோல நகர்புறங்களிலும் வேலைசெய்வோரின் எண்ணிக்கையும் சதவீதம் அடிப்படையில் 68 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

இதுகுறித்து 'ஸ்டேட் ஆப் வொர்க்கிங் இந்தியா"'அறிக்கையை தயாரித்த அமித் பசோல் கூறுகையில், " பணமதிப்பிழப்புக்குப் பின் வேலைவாய்ப்பில் புயல்போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், படித்துமுடித்து கனவுகளுடன் வரும் இளைஞர்கள் ஒருபுறம் அதிகரித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு வேலைதரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் உருக்குலைந்து போய்விட்டன,  தனியார் நிறுவனங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பும் பலவீனமடைந்து வேலைஉருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன.

 காரணம், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவைதான். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் அமல்படுத்தப்பட்டபின், நாட்டில் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன்பின் முழுமையாக சீரான, இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏற்குறைய பணமதிப்பிழப்புக்குப்பின் 50லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் " எனத் தெரிவித்தார்.

அதிகமான வேலையிழப்பு

இந்த அறிக்கையில், குறிப்பாக, கிராமப்புறங்களில் 20 வயது முதல் 24 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்து 35வயதுக்கு கீழ்பட்ட நிலையில் உள்ள இளைஞர்கள் இடையேதான் வேலையின்மை அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் அதிக அளவில் நன்கு படித்தவர்கள், இளைஞர்கள் இடையேதான் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதிலும் பெண்கள் மிகமோசமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் சந்தையிலும், புள்ளிவிவர அமைப்பு முறையிலும் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகிறது என்று அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிட மறுப்பு

சமீபத்தில் தேசிய புள்ளியியல் ஆணையத்தில் இருந்து பி.சி. மோகனன் பதவிவிலகினார். கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு மத்திய அரசு அனுமதிமறுக்கிறது என்பதாக குற்றம்சாட்டி அவர் பதவிவிலகினார். மேலும், பிஎல்எப்எஸ்(Centre’s Periodic Labour Force Survey (PLFS) ) அறிக்கையின்படி, நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுகிறது என்று கசிந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அப்போது பி.சி.மோகனன் கூறுகையில், " கிராமபுற வேலையின்மை என்பது சிறியவயதுள்ள அதாவது 15 முதல் 29 வயதுள்ள பிரிவினரிடையேதான் 80 சதவீதம் இருக்கிறது. நகர்புறங்களில் இது 77 சதவீதமாக இருக்கிறது. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்து வெளியேறும் இளைஞர்களிடையேதான் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது " எனத் தெரிவித்தார்.

எப்படி சமாளிக்கலாம்

தேசிய நகர்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் மூலம் இந்த வேலையின்மை சூழலை கையாளமுடியும். உதாரணமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டத்தை செயல்படுத்தி வேலையின்மை அளவைக் குறைக்கலாம் என்று ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆலோசனைப்படி, நகர்புறங்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் தரும் வகையில், 100 நாட்களுக்கு வேலை வழங்கலாம். குறிப்பாக அரசு கட்டிடங்களை  பராமரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் பணிகளில் ஈடுபடுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் ஹரினி நாகேந்திரா கூறுகையில், " அடுத்த சில 10 ஆண்டுகளில் நாட்டின் பாதியளவு மக்கள்தொகை நகர்புறங்களில்தான் வசிக்கப்போகிறார்கள். ஆதலால், தனியார் துறைகள்தான் இதுவரை அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வந்த நிலையில் இந்த திட்டம் அரசு துறையில்வேலைவாய்ப்பை உருவாக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x