Published : 17 Apr 2019 01:36 PM
Last Updated : 17 Apr 2019 01:36 PM

புல்வாமா தாக்குதலில் பலியானவர்களுக்காக கேரள கோயிலில் சடங்குகள் செய்த ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அத்துடன் தனது தந்தை ராஜீவ்காந்தி மற்றும் புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த 2சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் சடங்குகளைச் செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, "கடந்த முறையே ராகுல் காந்தி இந்தக் கோயிலுக்கு வர விரும்பினார்.

ஆனால், அப்போது பாதுகாப்புக் காரணங்களால் அவரால் வர இயலவில்லை. அதனால் இந்தமுறை வந்துள்ளார். இங்குதான் அவரது தந்தை ராஜீவ்காந்தியின் அஸ்தி பாபநாசினி ஆற்றில் கரைக்கப்பட்டது" என்றார்.

வேட்டி, மேலாடையில் வந்த ராகுல்:

ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் தொகுதிக்குட்பட்ட திருநெல்லி கிராமத்தில் உள்ள மகாவிஷ்ணு கோயிலில் தரிசனம் செய்தார்.

கேரள கோயில்களின் பாரம்பரிய வழக்கம் மற்றும் விதிகளின்படி வேட்டியும், மேல் துண்டும் அணிந்து தரிசனம் செய்தார்.

வயநாட்டைத் தவிர உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x