Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.14.85 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேலும் 2018-ம் ஆண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இதைத் தொடர்ந்து வயநாடு தொகுதியில் நேற்று முன்தினம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை அவர் தெரிவித்துள்ளார்.
பிரமாணப் பத்திரத்தில் ராகுல் தனது சொத்து மதிப்பு குறித்து கூறியிருப்பதாவது:ராகுல் பெயரில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.72 லட்சம் அளவுக்கு அவருக்கு கடன் உள்ளது. மேலும் அவருக்கு ரூ.5,80,58,799 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.7,93,03,977 மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன. மொத்தமாக ராகுலுக்கு ரூ.14.85 கோடி சொத்துகள் உள்ளன. அமேதி தொகுதியிலும் போட்டியிடும் ராகுல் காந்தியின் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கையில் ரூ.40 ஆயிரம் ரொக்கம், ரூ.17.93 லட்சம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ராகுல் கூறியுள்ளார். மேலும் அவருக்குச் சொந்தமாக 333.3 கிராம் எடையுள்ள தங்கம் உள்ளது.
அவருக்கு 2017-18ம் நிதியாண்டில் ரூ.1,11,85,570 வருவாய் வந்துள்ளதாகவும் ராகுல் பதிவு செய்துள்ளார். அவருக்கு வருமானமாக எம்.பி. ஊதியம், ராயல்டி, வாடகை, முதலீட்டுப் பத்திரங்கள் மீதான வட்டி, வங்கி முதலீடுக்கான வட்டி ஆகியவை மூலம் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் எம்.பில் முடித்திருப்பதாகவும் ராகுல் காந்தி தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT