Published : 10 Apr 2019 02:49 PM
Last Updated : 10 Apr 2019 02:49 PM
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூக தலைவர் கிரோரி சிங் பைன்சிலா இன்று பாஜகவில் இணைந்தார்.
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தினர். கடுமையான போராட்டத்தால் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில வாக்குறுதி அளித்தது. நீதிமன்ற வழக்கு காரணமாக இடஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்தது.
இடஒதுக்கீடு கோரி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டது. இந்தநிலையில் குஜ்ஜார் போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய கிரோரி சிங் பைன்சிலா இன்று திடீரென பாஜகவில் இணைந்தார்.
மத்திய அமைச்சரும், ராஜஸ்தான் மாநில பாஜக பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகரை டெல்லியில் இன்று சந்தித்து அவர் முன்னிலையில் கிரோரி சிங் பாஜகவில் இணைந்தார். அவரது மகன் விஜய் பைன்சிலாவும் பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக அவர்கள் இவரும் பாஜக தலைவர் அமித் ஷாவை இன்று காலை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் உட்பட வட இந்திய மாநிலங்களில் குஜ்ஜார் சமூகத்துக்கு கணிசமான வாக்கு வங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT