Published : 17 Apr 2019 01:21 PM
Last Updated : 17 Apr 2019 01:21 PM
மோடி என பெயர்வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசி, நான் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு களங்கம் விளைவிக்கிறார் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது, "நான் ஒரு கேள்வி கேட்கிறேன். திருடர்கள் அனைவரின் பெயருக்குப் பின்னால் மோடி எனும் பெயர் இருக்கிறது. அது நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என யாராக இருக்கட்டும். இன்னும் எத்தனை மோடி வெளியே வரப்போகிறார்களா நமக்குத் தெரியாது" எனத் தெரிவித்திருந்தார்.
ராகுலின் இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்தார்.
மகராராஷ்டிராவில் உள்ள அக்லுஜ் எனும் இடத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''வாரிசு அரசியலில் நம்பிக்கை கொண்டிருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மாதா மக்களவைத் தொகுதியில் இந்த முறை போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்துகொண்டு போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம், சமூகத்தில் உள்ள அனைத்து மோடிக்களும் திருடர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியும் நான் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைத் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். இப்போது அவர்கள் எல்லையை மீறி நடந்து கொள்கிறார்கள், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள்.
வாரிசு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்னை முதலில் திருடர் என்ற வாரத்தையால் அவதூறு பரப்பினார். இப்போது, நான் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகமான மோடி சமூகத்தைக் குறிப்பிட்டு என்னை அவமானப்படுத்துகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து நான் வந்ததால் நான் இவ்வாறு புண்படுத்தப்படுகிறேன்.
பல ஆண்டுகளாக நான் சார்ந்திருக்கும் சமூகத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. அதை நான் தொடர்ந்து நிராகரித்து வந்தேன். இப்போது, என்னை அவமானப்படுத்தும் நோக்கில் ஒட்டுமொத்த சமூகத்தையே காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தி வருகிறது.
ஒரு சமூகத்தை அவமானப்படுத்த உங்களுக்கு துணிச்சல் இருந்தால், நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். என் ஒருவரை குற்றம் சாட்டும் நோக்கில், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையே திருடர் என்று முத்திரை குத்துகிறீர்கள்''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT