Published : 23 Apr 2019 04:11 PM
Last Updated : 23 Apr 2019 04:11 PM
மக்களவைத் தேர்தலில் 3-வது கட்டமாக 14 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மதியம் மூன்று மணி நிலவரப்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலாத்தில் வெறும் 9.63% மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. 14 மாநிலங்களிலும் ஒட்டுமொத்தமாக 39.57% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக 60.24% வாக்குகள் பதிவாகியுள்ளது.
காஷ்மீரில் பாரமுல்லா, ஜம்மு, ஸ்ரீநகர், லடாக், உத்தம்பூர், அனந்த்நாக் என ஆறு மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. ஏற்கெனவே 2 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இன்று மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அனந்தநாக் தொகுதியில் மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வன்முறை காரணமாக தேர்தல் நேரமும் இங்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி வெறும் 9.63% மட்டுமே வாக்குப்பதிவாகியுள்ளது.
அனந்தநாக் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த பண்டிட் சமூக வாக்காளர் ஒருவர், "நான் ஃபதேபூராவைச் சேர்ந்தவன். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. எங்களது பிரதான கோரிக்கை காஷ்மீர் பண்டிட்டுகள் மாநிலத்துக்கு பத்திரமாக திரும்ப வேண்டும் என்பதே. 30 வருடங்களுக்கு முன்னதாக அவர்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டனர். புதிய அரசாங்கமாவது எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என நான் நம்புகிறேன்" எனக் கூறினார்.
அனந்தநாக் தொகுதியில்தான் தற்போதைய முதல்வரும் பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு:
அசாம் - 60.24%
பிஹார் - 37.05%
கோவா - 46.53%
குஜராத் - 39.50%
ஜம்மு-காஷ்மீர் - 9.63%
கர்நாடகா - 38.19%
கேரளா - 43.21%
மகாராஷ்டிரா - 33.09%
ஒடிசா - 34.34%
திரிபுரா - 45.54%
உத்தரப்பிரதேசம் - 30.34%
மேற்குவங்கம் - 52.80%
சத்தீஸ்கர் - 44.77%
யூனியன் பிரதேசங்கள் வாக்குப்பதிவு:
தாதர் - நாகர் ஹவேலி - 37.20%
டாமன் டயு - 42.99%
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT