ஒருமாத கால அவகாச கோரிக்கையை ஏற்க மறுப்பு;  5 நாட்கள் மட்டுமே அவகாசம்: ரபேல் ஒப்பந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஒருமாத கால அவகாச கோரிக்கையை ஏற்க மறுப்பு;  5 நாட்கள் மட்டுமே அவகாசம்: ரபேல் ஒப்பந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒப்பந்தத்தின் மீதான பல்வேறு சர்ச்சைகள் தொடர்பான சீராய்வு மனுக்கள் குறித்து பதிலளிக்க ஒருமாத காலம் அவகாசம் கேட்டிருந்தது, இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் 5 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் போர் விமான வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீதான பதிலுக்கு மத்திய அரசு ஒருமாத கால அவகாசம் கேட்டிருந்தது, இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் 5 நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, “சனிக்கிழமை அன்று அல்லது அதற்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரஃபேல் போர்விமானக் கொள்முதல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் அதன் சந்தர்ப்பங்கள் பற்றி நீதிமன்றத்தில் பொய்த் தகவல் கூறி மறைத்ததாக எழுப்பப்பட்ட இன்னொரு குற்றச்சாட்டின் மீதான  மனு தொடர்பாகவும் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 14ம் தேதி உச்ச நீதிமன்றம் ரஃபேல் விவகாரம் தொடர்பாக தீர்ப்பளிக்கையில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக தங்களுக்கு வரம்புக்குட்பட்ட சட்ட எல்லைகளே உள்ளன என்று ரஃபேல் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாற்போல் தீர்ப்பளித்தது.

ஆனால் ஏப்ரல் 10ம் தேதி  சீராய்வு மனுக்களின் பராமரிப்புத் தன்மையை கேள்விக்குட்படுத்தி மத்திய அரசு எழுப்பியிருந்த கேள்விகளை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம் சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதே என்று டிசம்பர் 14 தீர்ப்பை மாற்றி அமைத்தது.

இன்று இது தொடர்பாக நடைபெற்ற சுருக்கமான விசாரணையின் போது அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் விசாரணையைத் தள்ளிப்போடக்கோரும் அரசின் சுற்றறிக்கை இது தொடர்பான அனைவருக்கும் அளிக்கப்பட்டதாக கோர்ட்டில் தகவல் தெரிவித்தார்.

சீராய்வு மனுவில் புதிய ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் அரசிடமிருந்து புதிய பதிலுக்கான தேவை உள்ளது.  “எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். உங்கள் ஏப்ரல் 10ம் தேதி உத்தரவு இந்த ஆவணங்களை அனுமதித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு பார்மல் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை” என்றார்.

உங்கள் குறை, நோட்டீஸ் அனுப்பாதது என்றால் உடனே நோட்டீஸ் அனுப்பி விடுகிறோம் என்று இதற்கு தலைமை நீதிபதி பதிலளித்தார்.

இந்நிலையில் குறுக்கிட்ட சீராய்வு மனுதாரர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவலை கோர்ட்டிற்கு அளித்ததன் மீதான விசாரணைக்கும் சேர்த்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு கே.கே.வேணுகோபால் எதிர்ப்புக் காட்டினாலும், நீதிபதி, “அரசு பொய் தகவலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான தங்கல் ஆட்சேபணைகளையும் மத்திய அரசு தனி பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்யலாம். இந்த பிரமாணப்பத்திரமும் சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்றார்.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் ரகசியமானவை அது பொதுவெளிக்கானதல்ல என்ற அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து  5 சீராய்வு மனுக்களின் சாதக பாதகங்களை அலசுவதற்கு தி இந்து (ஆங்கிலம்) வெளியிட்ட ஆவணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in