தலைமை நீதிபதி விவகாரம்: புகார் அளித்த நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் விசாரணைக் குழு முன் ஆஜரானார்

தலைமை நீதிபதி விவகாரம்: புகார் அளித்த  நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் விசாரணைக் குழு முன் ஆஜரானார்
Updated on
2 min read

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர், 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவின் முன் இன்று ஆஜராகினார்.

பாலியல் புகார்

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்தார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும் அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து அந்தப் புகார் சனிக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில்  விசாரிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

3 நீதிபதிகள் குழு

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் மூத்த நீதிபதி என்.வி.ரமணா, பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றனர்.

நீதிபதி ரமணா விலகல்

இந்நிலையில் புகார் அளித்த முன்னாள் நீதிமன்ற பெண் ஊழியர் விசாரணைக் குழுவில் நீதிபதி என்.வி.ரமணா இடம் பெற்றிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்து விசாரணைக் குழு தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதினார். அதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வீட்டில் தான் பணியாற்றி வரும்போது, அங்கு நீதிபதி என்.வி. ரமணா அடிக்கடி அங்கு வருவார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் நண்பர்களாக இருக்கும் போது விசாரணையின் தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், விசாரணைக் குழுவில் ஒரே ஒரு பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி மட்டும் இருக்கிறார்.

நீதிபதி மல்ஹோத்ரா நியமனம்

ஆனால், விசாகா குழு விதிமுறைகளின்படி, விசாரணைக் குழு அமைக்கப்படவில்லை. விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பணியிடத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில் பெரும்பான்மை பெண்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து நீதிபதி என்.வி.ரமணா தாமாக முன்வந்து விசாரணைக் குழுவில் இருந்து விலக்கிக்கொண்டார். அதற்கு பதிலாக நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.

ரகசிய விசாரணை

இந்நிலையில், புகார் அளித்த முன்னாள் பெண்ஊழியர் இன்று நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் விசாரணைக் குழு முன் இன்று நேரில் ஆஜரானார். அந்த பெண்ணுடன், நீதிமன்றத்தின் பொதுச்செயலாளரும் உடன் வந்திருந்தார், அவர் அந்த முன்னாள் ஊழியர் அளித்த அனைத்து ஆவணங்கள், பிரமாணப்பத்திரங்கள் உள்ளிட்டவற்றை இரு பெண் நீதிபதிகளான இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ராவிடம் வழங்கினார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையின் போது, நீதிமன்ற அறையில் புகார் அளித்த முன்னாள் பெண் ஊழியரைத் தவிர வேறு எவரும் அறையில் இருக்க நீதிபதிகள் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தின் செயலாலரையும் அங்கிருந்து செல்ல நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். அந்த பெண்ணுடன் வழக்கறிஞர் ஒருவரும் வர நீதிபதிகள் அனுமதித்திருந்தனர். ஆனால், விசாரணையின்போது, அந்த பெண்ணின் வழக்கறிஞரையும் அங்கிருந்து செல்ல நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in