பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் அதிரடி

பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் அதிரடி
Updated on
1 min read

பிரதமர் மோடி பயணம் செய்யும் ஹெலிகாப்டர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருக்கிறதா என்று சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏதேனும் மீறியிருக்கிறதா என்பதை அறிய ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரி முகமது மோசின் சோதனையிட்டார்.

கடந்த 1996-ம் ஆண்டு கர்நாடக ஐஏஎஸ் பேட்ஜைச் சேர்ந்தவர் முகமது மோசின். தேர்தல் அதிகாரியாக சம்பல்பூரில் நியமிக்கப்பட்டிருந்தநிலையில் அவர் மோடியின் ஹெலிகாப்டரை திடீரென சோதனையிட்டார். இதனால், பிரதமர் மோடியின் பயணம் 15 நிமிடங்கள் தாமதமானது.

பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரை மீறி இந்த சோதனையை முகமது மோசின் செய்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் முகமது மோசின் குறித்து புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் பார்வையாளர் முகமது மோசினை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், " தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் தேர்தல் ஆணையம் பிறப்பித்த விதிமுறைகளை பின்பற்றி நடக்கவில்லை. குறிப்பாக சிறப்பு பாதுகாப்பு பிரிவினரை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்டது தேர்தல் விதிமுறைக்கு முரணானது. குறிப்பாக சிறப்பு பாதுகாப்பு படைபிரிவினர் இருக்கும் இடம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறி முகமது மோசின் செயல்பட்டுள்ளதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விளக்கமான காரணங்கள் எதையும் தேர்தல் ஆணையம் குறிப்பிடவில்லை.

ஆனால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டர் ரூர்கேலாவில் பறக்கும் படையினரால் சோதனையிடப்பட்டது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஹெலிகாப்டர் சம்பல்பூரில் நேற்று முன்தினம் சோதனையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in