காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் வாகனங்கள் மீது கல்வீச்சு

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் வாகனங்கள் மீது கல்வீச்சு
Updated on
1 min read

அனந்தநாக் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தியின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உயரதிகாரிகள் கூறுகையில், ''காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹ்பூபா முப்தி அனந்தநாக் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அம்மாவட்டத்தைச் சேர்ந்த கைராம் கிராம மசூதி ஒன்றிற்கு இன்று காலை சென்றார்.

அங்கு பிரார்த்தனையை முடித்துக்கொண்டு பின்னர் பிஜ்பெக்ரா சென்று கொண்டிருந்தார். அப்போது விஷமிகள் சிலர் அவருடைய வாகனங்கள் மீது கல் வீசித் தாக்கினர். அதில் அவருக்காக உடன் வந்துகொண்டிருந்த உதிரி வாகனம் ஒன்று பலத்த சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் முப்தி உள்பட அவருடன் மற்ற வாகனங்களில் சென்றவர்கள் காயமின்றித் தப்பினர்'' என்று தெரிவித்தனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் அனந்தநாக் தொகுதியில் மெஹ்பூபா முப்தி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அவர் 2014-ல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனந்தநாக், குல்காம், புல்வாமா மற்றும் சோபியான் ஆகிய 4 தெற்கு காஷ்மீர் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 29 லிருந்து மே 6 வரை மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

நேற்று கதுவா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்தியா என்றால் மோடி அல்ல; மோடி என்பது இந்தியாவும் அல்ல என்று மெஹ்பூபா முப்தி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in