Published : 17 Apr 2019 12:47 PM
Last Updated : 17 Apr 2019 12:47 PM
முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என்று மதரீதியாக பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக பிஹார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிஹாரின் கத்தியார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டார். அப்போது பல்ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பர்சோய் நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சித்து பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில் " பாஜக உங்களை மதரீதியாக பிளபுபடுத்த முயற்சிக்கிறது. இங்கு நீங்கள் 64 சதவீதம் பேர் இருக்கிறீர்கள். சிறுபான்மையினர் இல்லை, பெரும்பான்மையாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக சேர்ந்து வாக்களித்தால் பாஜகவையும், மோடியையும் விரட்ட முடியும். ஆதலால் பாஜகவுக்கு வாக்களித்தீர்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் மதத்தை முன்வைத்து பேசியுள்ளார்.
இதையடுத்து, கத்தியார் மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பெயரில் பர்சோய் நகர போலீஸார் சித்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட பாஜக சார்பிலும் சித்து மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தை விதிமுறை அதிகாரி அமித் குமார் பாண்டே கூறுகையில், " தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத்சிங் சித்து மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123, 125 ஆகிய பிரிவின் கீழும், ஐபிசி பிரிவு 188ன்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதத்தை முன்னிறுத்தி நவ்ஜோத் சிங் சித்து மக்களிடம் வாக்குச் சேகரித்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT