

பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாகவே பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். தனது தோழியும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பின்னர் பாஜகவை பகிரங்கமாக தொடர்ந்து விமர்சித்துவந்தார்.
இந்நிலையில், அவர் சுயேச்சையாக பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பெங்களூரு செயின்ட் ஜோசப்ஸ் இந்தியா ஹை ஸ்கூலில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ், "மக்கள் மனங்களில் நான் நிற்கிறேன்.
எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் போலிப் பிரச்சாரங்கள் செய்கின்றனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்திருக்கிறேன்" என்றார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்ஷத், பாஜக சார்பில் பி.சி.மோகன் ஆகியோர் போட்டியிடுகின்ற்னார். காங்கிரஸ் வேட்பாளாருடன் பிரகாஷ் ராஜ் கைகுலுக்குவதுபோல் புகைப்படங்கள் வெளியாகின.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. களநிலவரம் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.