Published : 27 Apr 2019 08:30 PM
Last Updated : 27 Apr 2019 08:30 PM
டெல்லி கிழக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கவுதம் கம்பீர் அனுமதி பெறாமல் பேரணி நடத்தியதால் அவர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டது.
விதிமுறை தெரியாதபோது ஏன் விளையாட வருகிறீர்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அட்டிஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே இருவாக்களார் அட்டை வைத்திருந்தாக கம்பீர் மீது சர்ச்சை எழுந்த நிலையில் இப்போது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், பாஜகவில் சமீபத்தில் சேர்ந்தார். டெல்லி கிழக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் அரவிந்தர்சிங் லவ்லியும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அட்டிஷ் போட்டியிடுகின்றனர்.
வழக்குப்பதிவு
இந்நிலையில், ஜகன்புரா பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்கூட்டியே அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, எந்தவிதமான முன் அனுமதியும் இன்றி, கூட்டம் நடத்தியது குறித்து தேர்தல் அதிகாரி கே. மகேஷ் டெல்லி கிழக்கு போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் கம்பீர் மீது புகார் அளித்தார்.
தேர்தல் அதிகாரி மகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், டெல்லி போலீஸ் சட்டம் பிரிவு 28/110 கீழ் கம்பீர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை துணை ஆணையர் சின்மோய் பிஸ்வார் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து டெல்லி பாஜக செய்தித்தொடர்பாளர் ஹரிஷ் குராணா கூறுகையில், " கம்பீர் முறைப்படிதான் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து எங்கள் கட்சி சார்பில் முறைப்படியாக தேர்தல் ஆணையத்தை அணுகி முறையிடுவோம் " எனத் தெரிவித்தார்.
கிண்டல்
இதற்கிடையே கம்பீர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளர் அட்டிஷி கிண்டல் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிடுகையில், " முதலில் வேட்புமனுத் தாக்கலில் முரண்பாடுகள் இருந்தது, இரண்டாவது 2 வாக்காளர் இருந்தது தொடர்பாக கம்பீர் சிக்கலில் சிக்கினார். இப்போது, பேரணி நடத்தியதற்காக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பீருக்கு நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், விதிமுறைகள் தெரியாத போது, எதற்காக இந்த விளையாட்டை விளையாடுகிறீர்கள் " என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT