Published : 20 Apr 2019 12:00 AM
Last Updated : 20 Apr 2019 12:00 AM
முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவ கவுடா பெங்களூருவில் நேற்று கூறியதாவது:
தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரசியலில் தொடர வேண்டியதாகிவிட்டது.
இந்த தேர்தலில்கூட நான் போட்டியிட விரும்பாமல் ஹாசன் தொகுதியை எனது பேரனுக்கு விட்டுக்கொடுத்தேன். கட்சியினர் கேட்டுக்கொண்டதால் தும்க்கூருவில் போட்டியிட்டேன்.
பாஜக மூத்த தலைவர் அத்வானியைப் போல அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். பிரதமர் மோடியை எதிர்கொள்ளும் ஆற்றல் இப்போதும் எனக்கு இருக்கிறது. உயிருள்ளவரை கட்சியை வளர்க்க போராடுவேன். விரைவில் கட்சி அலுவலகம் கட்ட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன்.
அரசியலில் எந்த பதவியையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. குமாரசாமி விருப்பப்படுவதைப் போல மீண்டும் பிரதமராக விருப்பம் இல்லை. ராகுல் காந்தி பிரதமரானால் அவருக்கு பக்கபலமாக இருப்பேன்.
சிறிய கட்சியாக இருந்தபோதும் சோனியா காந்தி எங்களை ஆதரித்து கர்நாடகாவில் மஜத ஆட்சி அமைக்க உதவினார். அதற்கு நன்றிக்கடனாக ராகுல் காந்தி பிரதமராக உதவுவேன்.
மாநில கட்சிகளின் பங்களிப்புடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT