Published : 21 Apr 2019 10:51 AM
Last Updated : 21 Apr 2019 10:51 AM

காவலாளியை விடுவிக்க நாட்டு மக்கள் முடிவு: பிஹாரில் ராகுல் பிரச்சாரம்

பிஹார் மாநிலம் சுபால் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் நாட்டின் சிறந்த காவலாளியாக இருப்பேன் என வாக்குறுதி அளித்து அவர் (மோடி) வாக்கு கேட்டார்.

ஆனால், அனில் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு மட்டுமே காவலாளியாக உள்ளார். எனவே, வரும் தேர்தல் மூலம் அவரை பணியிலிருந்து விடுவிக்க நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

இதனால் அந்த காவலாளியின் முகத்தில் தோல்வி பயம் தெரியத் தொடங்கி உள்ளது. மேலும் ரஃபேல் முறைகேடு வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டால் அனில் அம்பானியுடன் காவலாளியும் சிறை செல்வார்.

பிஹார் மாநிலத்துக்கு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு உதவிகளை செய்தது. ஆனால் இப்போது, பிஹாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும் பெரிய அளவில் உதவி கிடைக்காத நிலை உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டு மக்களுக்கு பல்வேறு அநீதிகளை (அநியாய்) இழைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதை சரி செய்யும் வகையில் நியாய் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.

இது வறுமையின் மீதான துல்லியத் தாக்குதலாக அமைவதுடன் இந்தியப் பொரு ளாதார வளர்ச்சியையும் ஊக்கு விக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x