Last Updated : 30 Sep, 2014 03:15 PM

 

Published : 30 Sep 2014 03:15 PM
Last Updated : 30 Sep 2014 03:15 PM

பயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்ல இந்தியா: அமெரிக்காவில் மோடி பேட்டி

பயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்ல இந்தியா என்றும், பயங்கரவாதத்தின் உண்மையான விளைவுகளை பல நாடுகள் இன்னும் உணராமலே உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது கூட்டம், மெடிசான் மைதானத்தில் உரை என பல்வேறு நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தலைநகர் வாஷிங்டன் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது இந்தியாவுக்கு அல்-காய்தா விடுத்த எச்சரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "பயங்கரவாதம் மிகவும் அச்சுறுத்தலானது. இந்தியா அது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்திய முஸ்லிம்கள், அல்-காய்தாவின் அழைப்புக்கெல்லாம் செவிசாய்க்க மாட்டார்கள்.

இந்தியாவில் நிலவும் அனைத்து பயங்கரவாத செயல்களும் ஏற்றுமதி செய்யப்பட்டவையே தவிர, பயங்கரவாதத்துக்கு இந்தியா பிறப்பிடம் அல்ல" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "பல நாடுகள் பயங்கரவாதம் ஏற்படுத்தும் விளைவுகளை உணர்வதில்லை. 1990-ஆம் ஆண்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து எங்களுடன் அமெரிக்காவுக்கு பெரிதாக கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதத்தின் பின்விளைவுகளை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆன உறவு கணவன் - மனைவி இருவரின் உறவு போன்றது, எப்போதும் எல்லாவற்றிலும் ஒன்றுபட மாட்டோம், ஆனால் குறித்த விஷயங்களில், மக்கள் பிரச்சினையில் நாங்கள் ஒன்றுபடுவோம்.

பயங்கரவாதம் என்பது மனித இனத்திற்கே எதிரானது. மனிதத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக எழ வேண்டும். இங்கு பத்திரிகையாளர்கள் ஐ.எஸ். அமைப்பால் தலைதுண்டித்து படுகொலை செய்யப்படுவது போன்ற நிகழ்வுகளை, கடந்த 40 ஆண்டுகளாக கண்டு, இந்தியா அதற்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது. எல்லையில் வீரர்களை இழந்துள்ளது.

பயங்கரவாதத்தில் நல்லவை, தீயவை என எதுவும் இல்லை. இப்படி அவர்களுக்கு நாம் முத்திரை அளித்தால், அவர்கள் அதனை சாதகமாக பயன்படுத்துவார்கள். இப்படி நினைத்துதான் மேற்கு ஆசிய நாடுகள், ஐ.எஸ். அமைப்பை வளர்த்துவிட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தை வளர்க்க விடாமல், நாம் ஒன்றுபடுவதற்கான வழிகளை காண வேண்டும். நாடுகள் ஒன்றுபடுவதற்கு சுற்றுலா மட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்பது எனது கருத்து. அதனை நாம் ஊக்குவிக்க வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x