Published : 15 Apr 2019 12:00 AM
Last Updated : 15 Apr 2019 12:00 AM
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடகமாடியது.
ஏன் இந்த நாடகத்தை பிரதமர் மோடி தொடங்கினார்? நான் மக்களவையில் இந்த பிரச்சினையைக் கொண்டு வந்து பேசினேன். ஐயப்பன் மீது பக்தி வைத்துள்ள பக்தர்களின் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் கேரள மாநில சட்டப்பேரவை வழியாக நடவடிக்கை தேவை என்று கேட்டேன். ஆனால் நான் கூறிய ஒரு வார்த்தையையும் பிரதமரோ அல்லது மத்திய அமைச்சரோ கேட்கவில்லை.
பிரதமர் மோடி ஆடிய அந்த நாடகத்தை மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். சுவாமி ஐயப்பன் பெயரில் பக்தர்களை, மோடி ஏமாற்றிவிட்டார்.
ஆனால் ஏமாற்றப்பட்ட பக்தர்கள் நேர்மையானவர்கள். வரும் தேர்தலின்போது அவர்கள் அதற்கான பதிலை தங்களது வாக்குகளின் மூலம் தருவார்கள்.
முத்தலாக் மசோதா காலாவதியான நிலையில் அதை அமல்படுத்த அவசரச் சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. அதுபோன்ற நடவடிக்கையை ஏன் சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி எடுக்கவில்லை?ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். சபரிமலை கோயில் விவகாரத்தில் தலையிட்டு அங்கு அமைதியின்மையை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்ஸும், சங் பரிவாரும் முயன்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் அங்கு தடுக்கப்பட்டனர்.
நிலைமையை மோசமாக்குவதற்காக மத்திய அரசும், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும் கைகோர்த்தன. இந்த பிரச்சினை மோசமடைவதற்கு இரண்டு அரசுகளும்தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT