Last Updated : 13 Apr, 2019 12:00 AM

 

Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM

சிறையில் இருந்தாலும் பிஹாரில் அரசியல் செய்யும் லாலு

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு, மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனால் தொடரும் அவரதுசிறைவாசத்தில் லாலு ஜார்க்கண்டின் ராஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கிருந்தபடியே அவரது தலைமையில் பிஹாரின் 40 தொகுதிகளில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. இதன் உறுப்பினர்களான காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் சமதா, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா மற்றும் விஐபி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திச் சேர்த்துள்ளார் லாலு. இவர்களின் தொகுதிகளையும் பேசி ஒதுக்கீடு செய்ததில் சிறையில் இருக்கும் லாலுவின் பங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் இளையமகன் தேஜஸ்வியுடனான மோதலினால் லாலு அதிருப்தி அடைந்தார். அவர் கடந்த வாரம் ‘லாலு-ராப்ரி மோர்ச்சா’ எனும் பெயரில் ஓர் அரசியல் இயக்கம் துவக்கினார். அதன்மூலம் தம் எதிர்க்கட்சிகளின் வலையில் சிக்கி, மெகா கூட்டணிக்கு எதிராக வேட்பாளர்களை போட்டியிட வைப்பது தேஜ் பிரதாப் யாதவின் திட்டமாக இருந்தது. இதற்காக, கடந்த சனிக்கிழமை வரை காத்திருந்தார் லாலு. ஏனெனில், வாரத்தின் அன்றைய தினம் மட்டுமே அவரை கட்சியினரும், குடும்பத்தாரும் சந்திக்க முடியும். இவர்கள் மூலமாக தகவல்களை அனுப்பி பிஹாரில் தம் அரசியலை தொடர்கிறார் லாலு.

அன்று, தனது மகன் தேஜுக்கும் தகவல் அனுப்பி எதிர்க்கட்சிகளின் சதியில் சிக்காமல் அவரை லாலு காத்து விட்டார். லாலுவின் மைத்துனான சாது யாதவ் மூலமாக எதிர்க்கட்சிகள், தேஜ் பிரதாப்பை இயக்க முற்பட்டதாகக் கருதப்பட்டது. லாலு யோசனையின் பேரில்தன் சகோதரன் சாது யாதவை நேரடியாக சந்தித்த ராப்ரி அவரிடம் சிக்கியிருந்த மகன் தேஜை மீட்டார். தான் மணமுடித்த ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பியது முதல் தேஜ் பிரதாப் தன் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கொடுத்துள்ள குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருடன் வீட்டில் சாதுவும் தங்கியுள்ளார். தற்போது லாலு உத்தரவின் பேரில் தன் தங்கை மிசா பாரதிக்காக மட்டும் பாடலிபுத்ரா தொகுதியில் தேஜ் பிரச்சாரம் செய்து வருகிறார். இனி மக்களவை தேர்தல் முடியும் வரை தேஜ் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக லாலு சிறையில் இருந்தபடி மகள் மிசா பாரதியின் வெற்றிக்கும் அடித்தளமிட்டு விட்டார். கடந்த தேர்தலில் 40,322வாக்குகளில் மிசாவின் தோல்விக்கு அங்கு இடதுசாரிகள் போட்டியிட்டது காரணமாக அமைந்தது. இந்தமுறை அவ்வாறு நேராமல் அவர்களிடம் பேசி இடதுசாரிகள் பாடலிபுத்ராவில் போட்டியிடாமல் செய்து விட்டார் லாலு. இதற்கு பதிலாக அவர் தம் கட்சி பங்கில் இருந்து ஆரா தொகுதியை பிஹார் இடதுசாரிகளில் முக்கியதான சிபிஎம்-எம்எல் கட்சிக்கு அளித்து விட்டார்.

இதேபோல், தனது கருத்துக்களையும் வெளியிட முகநூல், ட்விட்டரை சிறையில் இருந்தவாறே நடத்துகிறார் லாலு. இதுபோன்ற நடவடிக்கைகளால் பிஹார்வாசிகள், ‘தேர்தல் அரசியலில் லாலுஈடுபடுவதை அவருக்கு ஜாமீன் அளிக்காமல் தடுக்கலாம். ஆனால்,அவர் இல்லாமல் எந்த கட்சியாலும் இங்கு அரசியல் நடத்த முடியாது’ என வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x