Published : 04 Apr 2019 02:55 PM
Last Updated : 04 Apr 2019 02:55 PM

மதம், மொழி, பிராந்தியம் ரீதியாக பாகுபாடு ஏற்படுத்துபவர்களைப் புறக்கணிப்போம்- இயக்குநர்கள், எழுத்தாளர்களைத் தொடர்ந்து 150 விஞ்ஞானிகள் வேண்டுகோள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மதம், மொழி, பிராந்தியம் ரீதியாக பாகுபாடு ஏற்படுத்துபவர்களைப் புறக்கணிப்போம் என்று 150 விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வியாளர்கள், போராளிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கூட்டமைப்பு இந்தியக் கலாச்சார மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

குறிப்பாக, இந்தியக் கல்வி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER), இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ஐஎஸ்ஐ), அசோகா பல்கலைக்கழகம், உயிரியல் அறிவியல் தேசிய மையம் (NCBS) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஆகியவற்றைச் சேர்ந்த 150 விஞ்ஞானிகள் சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

''வன்முறை சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ரீதியாக மக்களிடையே பாகுபாடு ஏற்படுத்துபவர்களைப் புறக்கணிப்போம். மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை ஒதுக்குவோம்.

விஞ்ஞானிகள், போராளிகள், பகுத்தறிவாளர்கள் வேட்டையாடப்பட்டனர். கொடுமைக்கு ஆளாகினர். தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். சிறையில் தள்ளப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக படுகொலை செய்யப்பட்டனர். இது நம் நாட்டின் எதிர்காலமாக இருக்கக் கூடாது. இவற்றை ஆதரிக்கும் செயல்களையும் நபர்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். பகுத்தறிவை இழிவுபடுத்துவதற்கும் ஆதாரத்துடனான சொற்பொழிவுகளைக் களங்கப்படுத்துவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

அதனால் அனைத்து இந்தியக் குடிமகன்களுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறோம். புத்திசாலித்தனத்துடன் வாக்களியுங்கள். உள்ளடக்கத்துடன் விவாதம் செய்யுங்கள். ஆதாரங்களுடன் விமர்சியுங்கள். அனைத்து மக்களும் நம்முடைய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தையும் அறிவியல் கோட்பாடுகளையும் நினைவில் கொள்ளுமாறு வேண்டுகிறோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை  ஐஐஎஸ்இஆரைச் சேர்ந்த பேராசிரியர் சத்யஜித் ராத் மற்றும் ஐஎஸ்ஐயைச் சேர்ந்த ராகுல் ராய் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

முன்னதாக, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தருணம் இது என்று இந்திய இயக்குநர்களும், வெறுப்பரசியலுக்கு விடை கொடுப்போம் என்று எழுத்தாளர்களும் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x